தினமலர் 12.02.2010
கலப்படமான டீ விற்பனை செய்த2 பேர் மீது மாநகராட்சி வழக்கு
திருநெல்வேலி:கலப்படமான டீ விற்பனை செய்த விற்பனையாளர், உரிமையாளர் மீது நெல்லை கோர்ட்டில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.சென்னை பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ, இணை இயக்குனர் டாக்டர் கண்ணன் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேயிலையில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். நெல்லை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் டாக்டர் கலு.
சிவலிங்கம் தலைமையில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் சங்கலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது அடங்கிய குழுவினர் நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டு வளாகத்திலுள்ள டீக்கடைகளில் தேயிலையின் தரம் குறித்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது காப்பி மற்றும் டீ ஸ்டாலில் விற்பனை செய்த டீயில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் உத்தரவின் பேரில் உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பினர்.
பகுப்பாய்வில் உணவு மாதரியாக எடுத்து அனுப்பிய டீயில் செயற்கை வண்ணங்கள் கலப்படம் செய்துள்ளது தெரியவந்தது. கலப்படமான டீ விற்பனை செய்த விற்பனையாளர் பகவதி, கடையின் உரிமையாளர் தர்மராஜ் மீது உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர, சென்னை உணவுக் கலப்பட தடைச் சட்ட இணை இயக்குனருக்கு, மாநகராட்சி உணவு ஆய்வளார் பரிந்துரை செய்தார். அவரது அனுமதியின் பேரில் கலப்படமான டீ விற்பனை செய்த பகவதி மற்றும் கடை உரிமையாளர் தர்மராஜ் மீது நெல்லை ஜே.எம்.4 கோர்ட்டில் உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.