தினமணி 12.02.2010
கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி ஆலோசனை
திருநெல்வேலி, பிப். 11: திருநெல்வேலி மாநகர் பகுதியில் கொசுகளை ஒழிப்பது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறையின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சந்திப்பில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, மாநகர சுகாதார அலுவலர் கலு. சிவலிங்கம் தலைமை வகித்தார்.
உதவி ஆணையர் (பொறுப்பு) சாமுவேல் செல்வராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பூச்சியல் துறை வல்லுநர் கந்தசாமி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கிருமி நாசினிகளைத் தெளிப்பது, கொசுக்களை நவீன முறையில் அழிப்பது, கொசு மருந்து அடிக்க நவீன கருவிகளை இயக்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
பின்னர், நவீன கருவிகளை இயக்குவது குறித்து சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கொசுக்களை அழிக்க 65 குழுக்கள் அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில் உணவு ஆய்வாளர் அ.ரா. சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது, முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.