தினமலர் 15.02.2010
ஓட்டல்களில் சுகாதார ஆய்வாளர் ஆய்வு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு
ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டல்களில் சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகிறதா? சுகாதாரமான முறையில் சப்ளை செய்யபடுகிறதா? சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பதை சுகாதார ஆய்வாளர்கள் சரியான முறையில் ஆய்வு செய்யாததால் நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலா ஸ்தலமாக உள்ளதால் நாள்தோறும் வெளி மாநில மற்றும் மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால் மாவட்டத்தில் கையேந்திபவன் முதல் ஸ்டார் ஓட்டல்கள் வரை பஞ்சமில்லாமல் அதிகமாகவே காணப்படுகிறது.
மேலும், தற்போது வீட்டில் கணவன் மனைவி இரண்டுபேருமே பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாக மாறிவரும் நிலையில், வேலை பளு காரணமாக அடிக்கடி ஓட்டல்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், ஓட்டல்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. கடந்த சில மாதங்களாகவே புது புதுநோய்கள் பரவிவரும் நிலையில் மருத்துவ துறையினர் வீட்டில் சுகாதாரமாக இருக்க வேண்டும், குடிநீரை சுடவைத்து குடிக்க வேண்டும், பழைய(கெட்டுபோன) உணவுகளை தவிர்க்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை கூறிவருகின்றனர். தண்ணீர் மூலமாகவே பல நோய்கள் வருவதற்கு காரணமாக உள்ளது என கூறப்படும்நிலையில் மாவட்டத்தில் பரவி வரும் காய்ச்சலுக்கு ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படும் குடிநீராகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.
ஓட்டல்களில் தரவரிசை அடிப்படையில் சப்ளை செய்பவர்களின் உடை முதல் சப்ளை செய்யும் பாத்திரங்கள், டேபிள் சேர்கள், காற்றோட்ட வசதி போன்றவை எப்படி அமைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் சுடுதண்ணீர் கேட்டால் தர வேண்டும், கழிப்பறை வசதி இருக்க வேண்டும், சமையல் செய்யும் இடங்கள் மறைவாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
ரோட்டில் அடுப்பை வைத்து சமையல் செய்யக்கூடாது, தீராத நோயோ, காய்ச்சல் இருமல் போன்ற நோய் உள்ளவர்களை சப்ளைக்கு வைத்திருக்க கூடாது, சப்ளைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் சுடுதண்ணீரில் கழுவ வேண்டும். சிறுவர்களை வேலைக்கு வைத்திருக்ககூடாது போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல ஓட்டல்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதே கேள்விகுறியாகத்தான் உள்ளது. குறிப்பாக குடிநீர் சுத்தமில்லாத நீரை பல ஓட்டல்களில் வழங்குகின்றனர். அசைவ ஓட்டல்களில் கறிகள் சுகாதாரமான முறையில் வெட்டப்பட்டு சமைக்கப்படுகிறதா என்பதே தெரியவில்லை. சில ஓட்டல்களில் குறைந்த விலைக்கு, நோய் வந்த ஆடு கோழிகளின் கறிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் உணவுகளை சாப்பிடுவோருக்கு பல்வேறு நோய்கள் வரவாய்ப்பு உள்ளது. ஓட்டல்களின் சுகாதார ஆய்வாளர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தரமற்ற நிலையில் செயல்படும் ஓட்டல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.