தினமணி 18.02.2010
15 துரித உணவகங்களுக்கு சீல்: சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
சென்னை, பிப். 17: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த 15 துரித உணவகங்கள் மற்றும் டீ கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர்.
நடைபாதை வியாபாரிகள் சீரமைப்புக் குழு பரிந்துரைப்படி, புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருந்த நடைபாதை வியாபாரிகளுக்கு அல்லிக்குளம் வளாகத்தில் கடை வைத்துக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டது. இதில் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள் ஒதுக்கீடு செய்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 15 துரித உணவகங்கள் மற்றும் டீ கடைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்து பிரியாணி, பரோட்டா, மீன், கறி, சாம்பார் உள்ளிட்ட 850 கிலோ உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.