தினமலர் 23.02.2010
வாலாஜா, ராணிப்பேட்டையில் சுகாதாரத்துறை அதிரடி சோதனை
வாலாஜா/ ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை, வாலாஜாவில் நேற்று மாவட்ட சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை செய்து கலப்பட பொருட்களை பறிமுதல் செய்தனர்.மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமையில் நேற்று அதிகாரிகள் வாலாஜா, ராணிப்பேட்டையில் உள்ள மளிகைக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.டீக்கடைகளில் சோதனை செய்த அவர்கள் குளிர்ந்த நீரில் டீத்தூளை போட்டு பரிசோதனை செய்ததில் டீத்தூள் கரைந்து தண்ணீர் பிரவுன் கலரில் நிறம் மாறியது. பல கடைகளில் நிறம் மாறிய டீத்தூள் சில கடைகளில் நிறம் மாறவில்லை. இது குறித்து சுரேஷ் கூறுகையில் குளிர்ந்த நீரில் டீத்தூளை போட்டால் நீர் நிறம் மாறக்கூடாது.
நிறம் மாறினால் அது கலப்பட டீத்தூளாகும். இந்த டீயை குடிப்பவர்களுக்கு குடல் சம்பந்தமான நோய்கள், கை, கால் மூட்டு வலிகள் ஏற்படும் என்றார்.மேலும் மளிகை கடைகளில் சோதனை செய்ததில் சில கடைகளில் கடையின் பெயருடன் பிளாஸ்டிக் கவர்களில் பருப்பு, சர்க்கரை உள்பட பல பொருட்கள் பேக் செய்து விற்பது தெரியவந்தது. பாக்கட்டின் மேல் தயாரிப்பு தேதி,காலாவதி தேதி மற்றும் விலை குறிக்கப்படவில்லை. இது உணவு கலப்பட சட்டத்தின்படி குற்றமாகும். இது போன்ற கடைகளில் சுகாதாரத்துறையினர் மாதிரிகள் எடுத்தனர். எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் கிண்டியில் உள்ள பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டு டெஸ்ட் ரிசல்ட் கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.