தினமணி 25.02.2010
28.5 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்
தருமபுரி, பிப். 24: தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், தீர்த்தமலை பகுதிகளில் உள்ள டீ கடைகளில் புதன்கிழமை பொது சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் 28.5 கிலோ கலப்பட டீ தூளை பறிமுதல் செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்ட பொதுசுகாதாரத் துறை துணை இயக்குநர் என்.அய்யனார் உத்தரவின் பேரில் காரிமங்கலம் பகுதிகளில் உள்ள டீ கடைகளில் வட்டார மருத்துவ அலுவலர் த.சரவணன், காரிமங்கலம் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் எஸ்.ஜெகன்மோகன், உணவு ஆய்வாளர் பி.நாகராஜன் உள்ளிட்டோர் டீ தூளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதில் 5 கடைகளில் பயன்படுத்தப்பட்ட 4 கிலோ கலப்பட டீ தூளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல தீர்த்தமலை பகுதிகளில் உள்ள டீ கடைகளில் பயன்படுத்திய 23.5 கிலோ கலப்பட டீ தூளை, தீர்த்தமலை வட்டார மருத்துவ அலுவலர் கே.எஸ்.ராஜா, உணவு ஆய்வாளர் ஏ.சேகர் உள்ளிட்டோர் பறிமுதல் செய்தனர்.
கலப்பட டீ தூளை பயன்படுத்தியவர்கள் மீது உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை துணை இயக்குநர் என். அய்யனார் தெரிவித்துள்ளார்.