தினமலர் 01.03.2010
யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வினியோகம் துவக்கம்
சென்னை :தேசிய யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில், யானைக்கால் நோயைத் தடுப்பதற்கான மாத்திரைகள் சென்னையில் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகின்றன.யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், துவக்கி வைத்து, சென்னை மேயர் சுப்ரமணியன் பேசியதாவது:இந்தப் பணியில் 850 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுபட்டவர்களுக்கு சுகாதாரத்துறை களப்பணியாளர் மூலம் நேரடியாக நாளையும், நாளை மறுநாளும் வீடு, வீடாகச் சென்று மாத்திரைகள் வழங்கப்படும்.இந்நோயால் பாதிக்கப்பட்ட 286 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு சுப்ரமணியன் பேசினார்.