தினமலர் 01.03.2010
யானைக்கால் நோய் மாத்திரை வழங்கல்
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் யானைக்கால் நோயை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவருக்கும் டி.இ.சி மாத்திரை நேற்று வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் விஜயகுமார் மாத்திரை வழங்கும் முகாமை வீடு வீடாக சென்று துவக்கி வைத்து பேசியதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் யானைக்கால் நோய் வராமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவருக்கும் டி.இ.சி மாத்திரை வழங்கப்படுகிறது. 2 வயது முதல் 5 வயது வரை ஒரு மாத்திரையும், 6வயது முதல் 14 வயது வரை இரண்டு மாத்திரையும், 15 வயது முதல் உள்ளவர்களுக்கு 3 மாத்திரையும் வழங்கப்படுகிறது. இத்துடன் அல்பெண்டாசோல் ஒரு மாத்திரையும் சேர்த்து வழங்கப்படுகிறது. 2 வயதுக்குட்பட்டவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் இந்த மாத்திரை வழங்கப்படமாட்டாது.
இந்த மாத்திரையால் உடலிற்கு எந்தவித தீங்கும் இல்லை. மாத்திரை வழங்கும் பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர்கள், மகளிர்சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் என 2 ஆயிரத்து 141 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 827 பேர் மாவட்டத்தில் பயன் பெறுவர்.
விடுபட்டவர்களுக்கு இன் றும்(1ம்தேதி), நாளையும்(2ம் தேதி) சுகாதார பணியாளர்கள் மூலம் மாத்திரைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் மாத்திரை சாப்பிடுவதால் வரும் 5 ஆண்டுகளுக்குள் யானைக்கால் நோயை முற்றிலும் ஒழித்து விடலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டு யானைக்கால் நோய் வராமல் தடுக்கவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ ராஜ்குமார், நகராட்சி தலைவர் ராஜா, டிஆர்ஓ பழனிசாமி, ஆர்டிஓ பாலுசாமி உட்பட வருவாய்துறை அதிகாரிகள் மருத்துவ துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.