தினமணி 01.03.2010
19.7 லட்சம் பேருக்கு யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் விநியோகம்
திருவண்ணாமலை, பிப். 28: தேசிய யானைக்கால் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 19.7 லட்சம் பேருக்கு யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
ஆண்டுதோறும் 2 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு மாத்திரைகள் தரப்படுவதில்லை. 2 முதல் 5 வயது வரை உள்ளோருக்கு ஒரு டிஇசி மாத்திரைகளும், 5 முதல் 15 வயது வரை உள்ளோருக்கு 2 டிஇசி மாத்திரைகளும், 15 முதல் 60 வயது வரை உள்ளோருக்கு 3 டிஇசி மாத்திரைகளும் தரப்படுகின்றன.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணியை ஆட்சியர் மு.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சு.விஸ்வநாதன், துணை இயக்குநர் டாக்டர் சித்ரா, வட்டாட்சியர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதே போல செய்யாறு சுகாதார மாவட்டத்திலும் துணை இயக்குநர் டாக்டர் தேவபார்த்தசாரதி தலைமையில் 8.6 லட்சம் பேருக்கு மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டன.