தினமணி 01.03.2010
26.13 லட்சம் பேருக்கு யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள்
வேலூர், பிப். 28: வேலூர் மாவட்டத்தில், 26,13,323 பேருக்கு யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இப்பணியை வேலூர் மாநகராட்சி வளாகத்தில் ஆட்சியர் செ.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ சி.ஞானசேகரன், மேயர் ப.கார்த்திகேயன், துணை மேயர் தி.அ.முகமது சாதிக், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஜெயக்குமார், துணை இயக்குநர் சுரேஷ், மாநகராட்சி சுகாதார அலுவலர் பிரியம்வதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேலூர் சுகாதார மாவட்டத்தில் 12,87,745 பேருக்கும், திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தில் 13,25,578 பேருக்கும் மாத்திரைகள் வழங்கும் பணி தொடங்கியது. இப்பணியில் 1,500 தன்னார்வலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அரக்கோணம்
அரக்கோணத்தை அடுத்த ஆட்டுபாக்கம் கிராமத்தில் தேசிய யானைக்கால் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஊராட்சித் தலைவர் ஏ.வி மோகன் தலைமை தாங்கினார். சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் பி.கவிதா, சுகாதார ஆய்வாளர் ஆர்.அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிராமம் முழுவதும் யானைக்கால் நோய்த் தடுப்பு மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டன.
ஆம்பூர்
ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் யானைக்கால் நோய்த தடுப்பு மாத்திரைகள் விநியோகம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது, ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத் தலைமை வகித்து மாத்திரைகளை உட்கொண்டு விநியோகிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
துப்புரவு அலுவலர் (பொறுப்பு) நாராயணமூர்த்தி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் பி. காமராஜ், துப்புரவு ஆய்வர் பாலச்சந்தர், பூச்சியியல் உதவியாளர் எஸ். சேகர், துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 84,531 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மாத்திரைகள் விநியோகிக்கும் பணியில் 463 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மார்ச் 2-ம் தேதி வரை வீடு வீடாக சென்று இம்மாத்திரைகள் விநியோகம் செய்யப்படவுள்ளது.