தினமணி 01.03.2010
யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி
விழுப்புரம், பிப். 28: யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி இப் பணியை ஆய்வு செய்து, சிலருக்கு அவரே மாத்திரைகளை வழங்கினார்.
÷இந் நோயை தடுப்பதற்காக 80,60,250 டிஇசி மாத்திரைகளும், 23,50,000 அல்பண்டசோல் மாத்திரைகளும் பெறப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக 12,852 தடுப்புத் திட்ட பணியாளர்கள் மாத்திரை வழங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
÷இவர்கள் 50 வீடுகளுக்கு ஒருவர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஒவ்வொருவருக்கும் மாத்திரைகளை வழங்கி உட்கொள்ளச் செய்தனர். விடுபட்டோருக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வழங்கப்படும். இத் திட்டத்தினால் 28,41,856 பேர் பயன்பெறுவர்.
÷விழுப்புரம் வண்டிமேடு, அமீர் லே-அவுட் ஆகிய பகுதிகளில் இப் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார். எல்லோருக்கும் மாத்திரை விநியோகிக்கும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். ஆட்சியருடன் சுகாதாரத்துறை துணை இயக்குநர் கே.கிருஷ்ணராஜ், மாவட்ட பூச்சியியல் அலுவலர் முனுசாமி, சுகாதார ஆய்வாளர் மூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சம்பத், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.பழனிச்சாமி உள்ளிட்டோர் இருந்தனர்.