தினமலர் 03.03.2010
தரமற்ற முந்திரி, திராட்சை, ரொட்டி மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல்
சென்னை :தரமின்றி சாலையோரத்தில் வைத்து விற்கப் பட்ட 140 கிலோ முந்திரி, திராட்சை பழங்களை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். பேக்கரிகளில் 900 கிலோ காலாவதியான கேக், ரொட்டிகளும் பறிமுதல் செய்யப் பட்டது.சென்னையில் சாலையோரங்களில் தரமில்லாத வகையில் முந்திரி, திராட்சை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சுகாதாரத் துறையினர் அதிரடி சோனையில் இறங்கினர். பெரியமேடு கடப்பா ரங்கையா தெருவில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட தரமற்ற, அழுகிப்போன 140 கிலோ முந்திரி, திராட்சைப் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் தெளித்து அழித்தனர்.900 கிலோ கேக் பறிமுதல்:சென்னை பத்து மண்டலங்களிலும் நேற்று உதவி சுகாதார அலுவலர் தலைமையில், சுகாதாரத்துறை ஊழியர்கள் 321 பேக்கரி கடைகளில் ஆய்வு செய்தனர். விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த காலாவதியான 900 கிலோ கேக், ரொட்டி, பிஸ்கட் ஆகிய உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.கைப்பற்றிய 26 உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உணவுப் பொருட்கள் கையாள்வோருக்கான உரிமம் பெறாத பேக்கரிகள் தடை செய்யப்படும் எனவும் சுகாதாரத்துறையினர் எச்சரித்தனர்.