தினமணி 03.03.2010
20 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்
நாகப்பட்டினம், மார்ச் 2: நாகை மாவட்டம், திருமருகல் அருகே 20 கிலோ எடையிலான கலப்பட டீ தூள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருமருகல் வட்டார உணவு ஆய்வாளர் ஏ.டி. அன்பழகன், சுகாதார ஆய்வாளர் ஏ. கணேசன் ஆகியோர் திருமருகல் பகுதியில் செவ்வாய்க்கிழமை, உணவுப் பொருள் கலப்படம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, டீ தூளை விற்பனை செய்ய வந்த ஒருவர், 20 கிலோ டீத்தூளை கங்களாஞ்சேரி சாலையில் வீசி விட்டுத் தலைமறைவானார்.
அதிகாரிகள், அந்த டீ தூளை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அவை கலப்பட டீ தூள் என்பது தெரியவந்தது.
பின்னர், நாகை பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் வி. வைரமணி, கைப்பற்றப்பட்ட டீ தூளை ஆய்வு செய்து, கலப்பட டீ தூளை கண்டறியவது எப்படி என்பது குறித்து திருமருகல் பகுதியில் உள்ள வணிகர்களிடையே விளக்கினார். பின்னர், அவர் தெரிவித்தது :
கலப்பட டீ தூளை உட்கொள்வதால் புற்றுநோய், சிறுநீரகப் பிரச்னை உள்பட பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாக நேரிடும். உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் டாக்டர் வி. வைரமணி.