தினமலர் 04.032010
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில்இன்று வரு முன்காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் மகப்பேறு உதவித் தொகை வழங்கப்படுகிறது.தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்களை நகர மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டில் தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 5 வரு முன் காப்போம் மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது. நான்கு முகாம்கள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு நடப்பு நிதியாண்டின் கடைசி வருமுன் காப்போம் மருத்துவ முகாம் இன்று தூத்துக்குடி குரூஸ்புரம் மாநகராட்சி நகர்நல மையத்தின் அருகே உள்ள ஆர்.சி துவக்கப்பள்ளியில் நடக்கிறது. சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முகாமை துவக்கி வைக்கிறார். கலெக்டர் பிரகாஷ் தலைமை வகிக்கிறார். மேயர் கஸ்தூரிதங்கம் முன்னிலை வகிக்கிறார். கமிஷனர் குபேந்திரன் வரவேற்றுப் பேசுகிறார். சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் உமா திட்ட விளக்கம் பற்றி பேசுகிறார். தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினர் பெரியசாமி, 16வது வார்டு கவுன்சிலர் பிளவர்ராஜ்குமார், இன்ஜினியர் ராஜகோபாலன், நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் ஆகியோர் பேசுகின்றனர். சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி நன்றி கூறுகிறார். முகாமில் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளித்து இலவச மருந்துகளும் வழங்கப்படுகிறது. கண்நோய்கள், காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான நோய், பல் நோய், காசநோய், இருதய நோய், தொழுநோய் ஆகியவற்றிற்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. 40 டாக்டர்கள், 60க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாது சித்த மருத்துவ வல்லுநர்களும் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளிக்கின்றனர். ரத்த அழுத்தம், இ.சி.ஜி, ஸ்கேன் போன்ற வசதிகளையும் இலவசமாக இந்த முகாமின் மூலம் மக்கள் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி சுகாதார அதிகாரி திருமால்சாமி டாக்டர்கள் தேவிகுமாரி, ஜெயந்திமச்சோடா, முத்துலட்சுமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்து வருகின்றனர்.