தினமலர் 10.03.2010
கோதுமை மாவு தயாரிப்பாளர், விற்பனையாளர் உட்பட 3 பேர் மீது நெல்லை கோர்ட்டில் வழக்கு
திருநெல்வேலி: உணவு கலப்பட தடைச் சட்ட விதிகளுக்கு இணங்க தயாரிக்கப்படாத கோதுமை மாவு பாக்கெட்டுகளை தயாரித்த மற்றும் விற்பனை செய்த 3 பேர் மீது நெல்லை ஜே.எம்.5 கோர்ட்டில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.நெல்லை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் மாநகர சுகாதார அதிகாரி கலுசிவலிங்கம் ஆலோசனையின் பேரில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், மாநகராட்சி பகுதிகளில் விற்பனையாகும் பல்வேறு உணவுப் பொருட்களை உணவு மாதிரியாக எடுத்து சோதனை செய்து வருகிறார். அதன்படி கடந்த 2008ம் ஆண்டு செப்.25ம் தேதி உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், பேட்டை பலசரக்கு கடையில் செய்யது மக்தும் அமீர் விற்பனை செய்த கோதுமை மாவு பாக்கெட்டுகளை உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பினார். இதில் உணவு கலப்பட தடைச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் குறிப்பிடவேண்டிய தயாரிப்பாளரின் முழு முகவரி குறிப்பிடாமல் இருப்பது கண்டறியப்பட்டது.
உணவு கலப்பட தடைச்சட்ட விதிகளை மீறி தயாரிக்கப்ட்ட கோதுமை மாவு பாக்கெட்டுகளை விற்பனை செய்த செய்யது மக்தும் அமீர் மற்றும் தயாரிப்பாளர்கள் விஜயா, சிவக்குமார் மீதும் உணவு கலப்பட தடைச் சட்ட விதிகளின் கீழ் வழக்கு தொடர சென்னை பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி இணை இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில் மேற்கண்ட மூவர் மீதும் நெல்லை ஜே.எம்.5 கோர்ட்டில் உணவு ஆய்வாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.