தினமணி 10.03.2010
திருநகரில் ஒருங்கிணைந்த இறைச்சி கடைகள்
திருப்பரங்குன்றம், மார்ச் 9: திருநகர் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
திருநகரில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி மற்றும் மக்கள் அதிகமாக வசிக்கக் கூடிய பாண்டியன் நகர், நெல்லையப்பபுரம், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இறைச்சிக் கடைகள் உள்ளன. இவற்றின் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்களும் பரவி வருகின்றன.
இது குறித்து, பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இப்பிரச்னையைத் தீர்க்கும் விதத்தில், திருநகர் 2-வது பஸ் நிறுத்தம் அருகே ஒருங்கிணைந்த இறைச்சிக் கடைகள் சுமார் ரூ. 6 லட்சம் செலவில் பேரூராட்சி நிர்வாகம் கட்டி வருகிறது.
23 கடைகளாகக் கட்டப்பட உள்ள இக் கட்டடப் பணி, பாதி முடிந்துவிட்டது என்றும், முழுவதும் வெகு சீக்கிரமே முடிந்து இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று பேரூராட்சித் தலைவர் கே. இந்திராகாந்தி தெரிவித்தார்