தினமலர் 11.03.2010
மளிகை கடையில் கலப்பட உளுந்து உணவு ஆய்வாளர் திடீர் சோதனை
மேட்டூர்: மேட்டூரில் மளிகை கடைகளில் விற்பனை செய்யும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை ஆகியவற்றில் கலப்படம் உள்ளதா என கண்டறிய நகராட்சி உணவு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ரேஷன் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ துவரம் பருப்பு 60 முதல் 70 ரூபாய் வரையிலும், உளுந்தம்பருப்பு 70 முதல் 73 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் முன்னணி நிறுவனங்களின் பாக்கெட்டுகளில் அடைத்த துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. சில கடைகளில் சில்லரை விற்பனைக்காக பொட்டலத்தில் அடைக்காமல் கொட்டி வைக்கப்பட்ட துவரம் பருப்பும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையாக விற்பனை செய்யப்படும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பில் ரேஷன் பருப்பு கலக்கவோ அல்லது பருப்பு பளபளப்பாக தெரிவதற்காக வண்ணப்பொடிகள், மட்டரக ஆயில் போன்றவற்றை பயன்படுத்த வாய்ப்ப்புள்ளது. பளபளப்பிற்காக பொடிகள், ஆயில் போன்றவற்றை கலப்பதால், அதை சாப்பிடும் மக்களுக்கு வயிற்று உபாதை, அல்சர் போன்ற நோய்கள் ஏற்படும்.
கடைகளில் கலப்பட துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்பட உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறதா என்பது குறித்து மேட்டூர் நகராட்சியில் உள்ள மளிகை கடையில் திடீர் ஆய்வு நடந்தது. நகராட்சி உணவு ஆய்வாளர் இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர் வேலவன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் தாங்கள் ஆய்வு செய்த கடைகளில் சந்தேகத்திற்கு இடமான துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு ஆகியவற்றை மாதிரிக்காக எடுத்து சென்றனர். இந்த உணவு பொருட்களில் கலப்படம் உள்ளதா என கண்டறிய பாளையங்கோட்டையில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். பருப்பில் கலப்படம் இருப்பது தெரியவந்தால், சம்பந்தபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.