தினமலர் 12.03.2010
தேயிலையை தொடர்ந்து பருப்பில் கலப்படம் : சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகை கடையில் விற்பனை செய்யப்படும் பருப்பில் கலப்படம் உள்ளதா என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் என்று ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் டீ தூள்களில் கலப்படம் சேர்க்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. பால் கட்டண உயர்வை தொடர்ந்து டீயின் கட்டணமும் உயர்த்தப்பட்டது.இருப்பினும் டீ தூளில் கலப்படம் செய்யப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் கிள்ளியூர் ஒன்றிய பகுதியில் அதிகாரிகள் திடீர் என்று ஆய்வு செய்து கலப்பட டீ தூள்களை கைப்பற்றி அழித்தனர். இந்நிலையில் பருப்பிலும் கலப்படம் சேர்க்கப்படுவதாக புகார்கள் சென்றன.இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் உத்தரவின் படி கிள்ளியூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் செல்வன், ரெஞ்சித்குமார், ஜீவகுமார் ஆகியோர் நட்டாலம், பம்மம், இரவிபுதூர்க்கடை, முள்ளங்கினாவிளை, கருங்கல் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படும் பருப்பு வகைகளை ஆய்வு செய்தனர்.கலப்பட பருப்பு வகை உணவுகளால் வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கலப்பட பருப்பு வகைகளின் வியாபார பயன்பாட்டை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.