தினமணி 12.03.2010
பருப்பு வகைகளில் கலப்படமா? நகராட்சி அதிகாரிகள் சோதனைதென்காசி, மார்ச் 11: தென்காசியில் உள்ள பலசரக்கு கடைகளில் விற்பனைச் செய்யப்படும் பருப்பு வகைகளில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா, என்பது குறித்து வியாழக்கிழமை நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
பொதுசுகாதாரத் துறை இயக்குநர் இளங்கோ, உணவு கலப்படத் தடுப்பு இணை இயக்குநர் கண்ணன் ஆகியோரின் உத்தரவை தொடர்ந்து, தென்காசி நகராட்சி ஆணையர் அப்துல்லத்தீப், உணவு ஆய்வாளர் முகம்மது அப்துல்ஹக்கீம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலசரக்கு கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
தென்காசி நகரில் மொத்த விற்பனை செய்யப்படும் பலசரக்கு கிட்டங்கிகளில் நடைபெற்ற சோதனையின் போது, துவரம்பருப்பு, கடலைபருப்பு போன்றவற்றில் கேசரிபருப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளதா, என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, இரண்டு பருப்பு மூட்டைகளிலும் தலா ஒரு மூடை வீதம் ஆய்விற்காக பறிமுதல் செய்தனர்.
கூலக்கடை பஜார் பகுதியில் சோதனையிடும் பணி நடைபெறுவது தெரிந்தவுடன் அனைத்து மொத்த விற்பனை நிலையங்களும் பூட்டப்பட்டு விட்டன.
கேசரிபருப்பு கலந்த பருப்பு வகைகளை உண்ணுவதால் முடக்குவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என உணவு ஆய்வாளர் ஹக்கீம் தெரிவித்தார்.
வள்ளியூர்
வள்ளியூர், பணகுடி, திசையன்விளை பகுதிகளிலுள்ள பலசரக்குக் கடைகளில் துவரம் பருப்பு, கடலைப் பருப்புகளில் கலப்படம் செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சுகாதாரத் துறை துணை இயக்குநரின் தனி உதவியாளர் அருணாச்சலம், வள்ளியூர் வட்டார சுகாதாரத் துறை மேற்பார்வையாளர் சேவியர், சுகாதார ஆய்வாளர்கள் ரகுபதி, சந்திரசேகரன், செந்தில் ஆகியோர் வள்ளியூர், பணகுடி, திசையன்விளை பகுதி பலசரக்குக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வள்ளியூரில் 13 கடைகளிலும், பணகுடியில் 5 கடைகளிலும், திசையன்விளையில் 3 கடைகளிலும் ஆக மொத்தம் 21 கடைகளில் துவரம் பருப்பு, கடலை பருப்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். இவற்றை பகுப்பாய்வுச் செய்து கலப்படம் இருப்பதை உறுதி செய்த பின்னர் சம்பந்தபட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.