தினமலர் 15.03.2010
மளிகை கடைகளில் திடீர் ஆய்வு
முசிறி : முசிறியில் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.தண்டலைப்புத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் சத்தியவதி அறிவுரையின் பேரில் முசிறி பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் உணவு ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உணவு ஆய்வாளர் கண்ணன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரலிங்கம் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் விஜயக்குமார், இளங்கோவன், சோமசுந்தரம், ஆகியோர் கொண்ட குழுவினர் முசிறி கைகாட்டி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் உணவு விடுதிகளில் விற்க மற்றும் பயன்படுத்தப்படும் துவரம்பருப்பு, கடலைபருப்பு ஆகியவற்றின் தரம் தயாரிப்பு தேதி , காலாவதி தேதி, கடைகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சில கடைகளில் உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பாக்கெட் பருப்பு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மளிகை கடை உரிமையாளர்கள் கடை உரிமத்தை 2010 -2011 ஆம் ஆண்டிற்கு புதுப்பிக்கவும், இதுவரை உரிமம் பெறாதவர்கள் உடன் பேரூராட்சி அலுவலகத்தில் தொகை செலுத்தி கடை உரிமம் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.