தினமலர் 16.03.2010
மாட்டிறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடு:குடியாத்தம் மக்கள் நகராட்சியிடம் புகார்
குடியாத்தம்:குடியாத்தத்தில் கோயில் அருகில் உள்ள மாட்டிறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே அக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: குடியாத்தம் பகுதியில் உள்ள முத்துகுமரன் நகர், கார்த்திகேயன் நகர் மற்றும் பலமநேர் ரோடு ஆகிய பகுதிகளில் நாங்கள் வசித்து வருகிறோம். பலமநேர் ரோடு பகுதியில் வீடுகளுக்கு அருகாமையில் கோயில் உள்ளது. கோயிலில் இருந்து 20அடி தூரத்தில் மாட்டிறைச்சி கடை மற்றும் வறுவல் கடை உள்ளது. இக்கடைகளில் இரவு 12மணி வரை சிலர் குடித்து விட்டு எங்களின் வீடுகளுக்கு அருகே இறைச்சி துண்டுகளையும், மதுபாட்டில்களை உடைத்தும் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. குடிகாரர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் பெண்கள் இந்தவழியாக செல்வதற்கு பயப்படுகின்றனர். எனவே மாட்டிறைச்சி கடை மற்றும் வறுவல் கடைகளை இந்த பகுதியில் இருந்து, அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.