தினமணி 17.03.2010
பருப்பு வகைகளில் கலப்படத்தை தடுக்க சுகாதாரத்துறை திடீர் ஆய்வு
பரமக்குடி,மார்ச் 16: பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்புகளில் கலப்படத்தைத் தடுக்க திடீர் ஆய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி சுகாதாரப் பிரிவு எல்லைக்குள்பட்ட நகராட்சிப் பகுதிகளில் உணவு கலப்பட தடைச் சட்டத்தின்கீழ், பலசரக்குக் கடைகளில் விற்கப்படும் துவரம் பருப்பு, கடலைப் பருப்புகளில் கலப்படம் உள்ளதா என பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் மாலதி உத்தரவின்படி, இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் 14 கடைகளில் துவரம் பருப்பு, கடலைப் பருப்புகளை சுகாதாரத் துறையினர் ஆய்வுக்காக எடுத்து சென்னை கிண்டி உணவுப் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பிவைத்தனர்.
இதில் சுகாதாரத்துறை தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் எட்டப்பராமன், உணவு ஆய்வாளர் முத்துச்சாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் நாகலிங்கம், வெள்ளையன், சந்திரபோஸ், நாகராஜ், பரமக்குடி நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஹரிதாஸ் ஆகியோர் இச் சோதனையில் ஈடுபட்டனர்.