தினமலர் 18.03.2010
திருமயத்தில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு
திருமயம்:திருமயம் பகுதியில் சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். திருமயம் தாலுகாவில் மளிகை கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பவானி உமாதேவி உத்தரவின்பேரில் நச்சாந்துப்பட்டி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் நாச்சியப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திருமயம், நச்சாந்துப்பட்டி, பனையப்பட்டி ஆகிய ஊர்களில் மளிகைக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
மேலும், அங்கு விற்பனைக்காக வைக்கப்படிருந்த மஞ்சள் தூள், சாம்பார் பொடி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, டீத்தூள் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து கிண்டியில் உள்ள உணவுப்பொருள் பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் தரமற்ற கேசரி பருப்புகளை துவரம் பருப்புகளுடன் சேர்த்து விற்று வந்ததாகவும், இதனால் முடக்குவாதம் ஏற்படும் என்றும் அதிகாரி கள் கூறினர். ஏற்கனவே, திருமயத்தில் வெளிநாட்டு சாக்லேட், ஐஸ்கிரீம் விற்றதை கண்டறிந்து ஆய்வு நடத்திய அதிகாரி கள் அதன் விற்பனையை கடந்த வாரம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.