தினமலர் 23.03.2010
ரூ.10 ஆயிரம் குளிர்பான பாக்கெட்டுகள் பறிமுதல் : அழுகிய பழங்கள், சாக்ரின் கலந்து ஜூஸ் விற்பனை : மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
திருநெல்வேலி : உணவு கலப்பட தடைச்சட்ட விதிகளுக்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள குளிர்பான பாக்கெட்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கரும்புச் சாறு கடைகளில் இருந்து கலப்படத்திற்கு பயன்படும் சாக்ரின், அழுகிய எலுமிச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் விற்கப்படும் குளிர்பான பாக்கெட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. மாநகராட்சி சுகாதார அதிகாரி கலுசிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் ஏ.ஆர்.சங்கரலிங்கம், காளிமுத்து அடங்கிய குழுவினர் நெல்லை ஜங்ஷன், கொக்கிரகுளம் பகுதிகளில் குளிர்பான பாக்கெட்டுகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களிடம் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது உணவு கலப்பட தடைச் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள குளிர்பான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். சந்திப்பு பஸ்ஸ்டாண்டில் பழ ஜூஸ் தயாரிப்பு கடையில் பழ ஜூஸ் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 5 தார் அழுகிய வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரும்புச்சாறு கடையில் வைக்கப்பட்டிருந்த அழுகிய எலுமிச்சை பழங்கல், சாக்ரின் பாக்கெட்டுகளை கைப்பற்றி கிருமி நாசினி தெளித்து அழித்தனர்.
மாநகராட்சி கமிஷனர் கடும் எச்சரிக்கை : மாநகராட்சிப் பகுதியில் உணவு கலப்பட தடைச் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக தயாரிப்பு தேதி, பயன்படுத்ததக்க தேதி போன்ற விபரங்கள் அச்சிடப்படாமல் குளிர்பான பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், அதன் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மீது உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார். கரும்புச் சாறுகளில் சாக்ரின், தண்ணீர் கலந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.