தினமலர் 24.03.2010
கெட்டுப்போன ஆட்டு இறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை: நகராட்சி எச்சரிக்கை
தஞ்சாவூர்:இறந்து போன ஆடுகளை விற்பனை செய்யும் இறைச்சி கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை நகராட்சி ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.தஞ்சை நகர பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான ஆடு அறுப்பு இடத்தில் ஆடுகளை வதை செய்யாமல் தெருவின் பல இடங்களில் ஆடுகள் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து ஆணையர் நடராஜன் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் அர்ஜீன்குமார் மற்றும் உணவு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் நகர பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் ஒரு இறைச்சி விற்பனை நிலையத்தில் இறந்து போன ஆடுகள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 60 கிலோ எடை கொண்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டது. இவற்றின் மதிப்பு ரூபாய் 17 ஆயிரத்து 200 ஆகும்.தஞ்சை நகராட்சிக்கு சொந்த மான ஆடுகள் அறுப்பு மையத்தில் மட்டுமே ஆடுகள் வதை செய்ய வேண்டும். இதைத் தவிர சாலை ஓரங்களில் ஆடுகள் வதை செய்து பொதுமக்களின் நலனை பாதிக்கும் வகையில் இறைச்சி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் நடராஜன் கூறினார்.