தினமணி 27.03.2010
மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரை, மார்ச் 26: மதுரை மாநகராட்சி ஊழியர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி, வெள்ளையன் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை, வாஸன் கண் மருத்துவமனை மற்றும் டூத்கேர் மையம் சார்பில் இந்த பரிசோதனை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முகாமை மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின், வாஸன் கண் மருத்துவமனை இயக்குநர் அஜித், கிரேஸ் பீட்டர் அறக்கட்டளைத் தலைவர் அமர்ஜோதிராதாபாய் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
மகளிர் மேம்பாட்டு இயக்குநர் (விஇஎம்சி) பா.ஸ்ரீலேகா தலைமை வகித்தார். முகாமில் 600 பேருக்கு கண் சிகிச்சையும், 400 பேருக்கு பல் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டன. டாக்டர்கள் பாலாஜி, சுதா பாலாஜி, சுகன்யா, சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநகராட்சித் தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், உதவி கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன், வாஸன் கண் மருத்துவமனை முதுநிலை பொது மேலாளர் சுந்தரமுருகேசன், மேலாளர் பன்னீர்செல்வம், வணிகவரி துணை ஆணையர் கனகவேல் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.