தினமலர் 29.03.2010
துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன.திருப்பூர் மாநகராட்சியில் 750 சுகாதார பணியாளர்கள் உள்ளனர். குப்பை அள்ளுதல், சாக்கடை தூர் வாருதல் உள்ளிட்ட அத்தியாவசிய துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். துப்புரவு பணியாளர்கள் பணியாற்றும் போது, விஷ வாயு தாக்குதல், நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. சில சமயங்களில், துப்புரவு பணியாளரின் உயிர் போகும் துர்பாக்கிய நிலையும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வாங்கப்பட உள்ளன. இதற்காக, உத்தேச செலவினமாக 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வாங்கப்பட உள்ளன. இதுகுறித்த தீர்மானம், வரும் 31ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதத்துக்கு வைக்கப்படுகிறது.