Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

200 கிலோ இறைச்சி பறிமுதல் : வியாபாரிகள் சாலை மறியல்

Print PDF

தினமலர் 29.03.2010

200 கிலோ இறைச்சி பறிமுதல் : வியாபாரிகள் சாலை மறியல்

வண்ணாரப்பேட்டை : மாநகராட்சி உத்தரவை மீறி கடைகளில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

மகாவீர் ஜெயந்தியன்று ஆடு, கோழி இறைச்சி, மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என, மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது. மாநகராட்சி நவீன இறைச்சிக் கூடங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டையில் இறைச்சி விற்பனை நடப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மாநகராட்சி துப்புரவு அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் மாப்பிள்ளை துரை, இளங்கோ, பெரியகருப்பன் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடைகளில் விற்பனை செய்ய 200க்கும் மேற்பட்ட கிலோ ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாகனங்களில் ஏற்றினர்.

வண்ணாரப்பேட்டை மொட்டை தோட்டம் மார்க்கெட்டில் சோதனை செய்த அதிகாரிகள், இறைச்சிகளை பறிமுதல் செய்ததால் வியாபாரிகள் ஆத்திரம் அடைந்தனர். அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்து பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றிய இறைச்சியை அவர்கள் எடுக்க முயன்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் குமார், இன்ஸ்பெக்டர் கோபாலகுரு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

இதனிடையே பறிமுதல் செய்த இறைச்சியை திரும்பி தர வலியுறுத்தி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து வியாபாரிகள் திடீர், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார், அவர்களை சமாதானம் செய்து சாலையோரம் அழைத்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த இறைச்சி, கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு பூமியில் புதைக்கப்பட்டது.

Last Updated on Monday, 29 March 2010 06:27