தினமலர் 30.03.2010
உணவு கையாள்வோருக்கு மாநகராட்சி மூலம் பயிற்சி
மதுரை: மதுரை ஓட்டல்களில் உணவு பொருள்களை கையாள்வோருக்கு மாநகராட்சி சார்பில் சுகாதார பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டல்களில் உணவு பொருள்களை கையாள்வோர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், உணவு பொருள் கலப்படம் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் ஏற்கனவே வடக்கு மண்டலத்தில் 50 பேருக்கு பல்வேறு ஓட்டல்களில் பணிபுரிவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக ஓட்டல் மேலாளர்கள், சர்வர்கள், சமையல் நிபுணர்கள் என தெற்கு மண்டலத்தில் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு, தன் சுத்தம், பூச்சிகளிடம் இருந்து உணவு பொருட்களை காப்பது, கை கழுவுவதன் அவசியம், உடலில் காயம், நோய் இல்லாமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றை பற்றி மாநகராட்சி நகர்நல அலுவலர் சுப்பிரமணியம், மருத்துவ கல்லூரி மைக்ரோ பயாலஜி பேராசிரியர் ஜான்சிராணி பயிற்சி அளித்தனர். தொடர்ந்து மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.