தினமலர் 31.03.2010
மரப்பேட்டை கழிவு நீர் ஓடையில் சுத்தம் செய்தது சுகாதாரப்பிரிவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் கழிவு நீர் தேங்கியிருந்த மரப்பேட்டை ஓடையை சுகாதாரப்பிரிவினர் நேற்று சுத்தம் செய்தனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36, 11 உள்ளிட்ட வார்டுகள் வழியாக ஓடை செல்கிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதியிலுள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் முழுவதும் அந்த ஓடையில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் ஓடையாகி ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு செல்கிறது.
இதனால், பொட்டுமேடு, மரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் ஏற்பட்டு, கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. ஓடையை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.நகராட்சி கமிஷனர் வரதராஜ் தலைமையில் நேற்று சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 30 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். பொட்டுமேடு பகுதியில் இருந்து மரப்பேட்டை பாலம் வரையிலும் நேற்று சுத்தம் செய்யப்பட்டது.சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:மரப்பேட்டை கழிவு நீர் ஓடை பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. அந்த ஓடையில் கழிவு நீர் செல்வதாலும், டியிருப்புகள் சுற்றிலும் உள்ளதாலும் பொது சுகாதார திட்டத்தில் சுத்தம் செய்யப்படுகிறது.கழிவு நீர் ஓடையில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் அடிக்கடி தேக்கமடைந்து விடுகிறது. இதனால், கழிவு நீர் வெளியேற வழியின்றி சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
வீட்டு குப்பைகளை கழிவு நீர் ஓடையில் கொட்ட வேண்டாம் என்று மக்களுக்கு பலமுறை எச்சரிக்கை செய்தும், யாரும் கடைபிடிப்பதில்லை. மரப்பேட்டை பாலம் அருகில் மரக்கடைக்காரர்கள் ஓடு, மரங்களை அடுக்கி வைத்திருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. தற்போது, ஓடையின் ஓரு பகுதி சுத்தம் செய்து கழிவு நீர் வடிந்து செல்ல வசதி செய்யப் பட்டுள்ளது. அதேபோன்று நகரப்பகுதி முழுவதும் பிரதான சாக்கடை ஓடை சுத்தம் செய்யப் படும். இவ்வாறு, சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.