தினமலர் 05.05.2010
எலிகளை ஒழிக்க மாநகராட்சி நடவடிக்கை : கமிஷனர் புதிய திட்டம்
சென்னை : பிளேக், லெப்டோ ஸ்பைரோசிஸ் நோய்களுக்கு காரணமான எலிகளை ஒழிக்க மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறினார்.
நகரில் அதிகரித்து வரும் எலிகள், அரசு அலுவலகங்களில் உள்ள பைல் களை கடித்து நாசம் செய்கிறது. தானிய கிடங்குகளில் பெரும் பங்கை காலி செய்கிறது. மேலும், எலிகள் மூலம் பிளேக், லெப்டோ ஸ்பைரோசிஸ் போன்ற நோய்களும் பரவுகின்றன. இதனால் எலிகளை ஒழிக்க, நடவடிக்கை மேற்கொள்ள புதிய திட்டம் அறிவிக் கப்படும் என்று மேயர் பட்ஜெட்டில் அறிவித்தார்.
இதுகுறித்து, கமிஷனர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது: எலிகளை ஒழிக்க, 10, 15 நாட் களில் பிரபல நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் கோர உள்ளது. இதில் பல அயல்நாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன. ஆனால், ஒரு எலியை பிடித்து ஒழிக்க 50 முதல் 60 ரூபாய் வரை கேட்டன. எனவே, மாநகராட்சி தரப்பில் உள்ளூர் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோர உள்ளது. உள்ளூர் நிறுவனங்களின் கருத்து மற்றும் செயல்திறனை ஆய்வு செய்து, மாநகராட்சிக்கு சாதகமான நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்படும். அதோடு, மத்திய அரசின் தானிய கிடங்குகளில் எலிகளை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கருத்துரு பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக, வடசென்னை பகுதிகளிலும், ஓட்டேரி நல்லா ஓரத்திலும், ரிப்பன் கட்டடத்திலும் கூட எலிகள் அதிகளவில் உள்ளன. நகரில் அமைக்கப்பட்ட செங்கற்களால் ஆன, மழைநீர் வடிகால் கால் வாய்களை எலிகள் சேதப்படுத்தின.இதையடுத்து, தற்போது கான் கிரீட் சுவரால் கட்டப்படுகிறது. கூவம் ஆற்றை சீரமைக்கும் பணியின் ஒரு கட்டமாக, ஆற்றின் ஓரம் இருந்த மாட்டுகொட்டகைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆற்றோரத்தில் மொத்தம் இருந்த 43 மாட்டு கொட்டகைகளில், கடந்த இரு வாரத்தில் 25 மாட்டு கொட்டகைகள் அகற்றப்பட்டன. இவ்வாறு கமிஷனர் கூறினார்.