தினமணி 06.04.2010
ஈரோட்டில் காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல்
ஈரோடு, ஏப். 5: ஈரோடு மாவட்டத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள், மருந்துகள், குளிர்பானங்கள், குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஈரோடு தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, காலாவதியான 22 குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மறுமுத்திரையிடாத 95 எடைக்கற்கள், தராசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக 95 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறி பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் நலத் துறையினர் தெரிவித்துள்ளனர்.