தினமலர் 09.04.2010
அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகள் பறிமுதல்
வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் அயோடின் கலக்காமல் விற்பனை அனுப்ப வைக்கப்பட்டிருந்த உப்பு பாக்கெட்டுகளை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
உணவில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் கடைகளில் அயோடின் கலந்த உப்பு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உப்பு உற்பத்திக்கு தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்து பெயர் பெற்று விளங்கும் வேதாரண்யத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று உப்பு உற்பத்தி செய்யப்படும் அகஸ்தியன்பள்ளி பகுதியில் நாகை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் வைரமணி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த உப்பு பாக்கெட்டுகளை சோதனை செய்ததில் அயோடின் கலக்காமல் இருப்பதும், ஆனால் அதன்மீது அயோடின் கலந்த உப்பு என்று லேபிள்களை ஒட்டி இருப்பதையும் கண்டறிந்து அவற்றை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வேதாரண்யம் நகராட்சித் தலைவர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், வேதாரண்யம் பகுதியில் அயோடின் கலந்த உப்பை விற்பனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவுப்படி அறிவிப்பு செய்துள்ளோம். மேலும் ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு தயாரிக்க 5 பைசா தான் செலவாகும். எனவே அயோடின் கலக்காமல் விற்பனைக்கு ஏற்றப்படும் உப்பு மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும். இதுகுறித்து நகராட்சி ஆய்வாளர்களும் பரிசோதனை செய்வர் என்றார்.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் வைரமணி கூறுகையில், கலெக்டர் உத்தரவின் பேரில் அயோடின் கலந்த உப்பு விற்பனை குறித்து கண்காணிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விதி மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
சோதனையின் போது உணவுத்துறை ஆய்வாளர் கோதண்டபாணி, நகராட்சி ஆய்வாளர் பிச்சைமுத்து, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், அழகிரிசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் பெட்டிக்கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் உடலுக்கு தீமை விளைவிக்கும் சீன நாட்டின் மிட்டாய்களையும் பறிமுதல் செய்தனர்.