தினமலர் 09.04.2010
கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் : நகராட்சி ஆணையர் தகவல்
திருவாரூர் : திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில் அயோடின் இல்லாத உப்பு மற்றும் கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார அலுவலர் தலைமையில் உணவு ஆய்வாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் உணவு பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு 27 உணவு மாதிரி எடுத்தனர். இதில் 2 தேயிலை உணவு மாதிரிகள், 2 பசும்பால் உணவு மாதிரி, வெல்லம் உணவு மாதிரி கலப்படமானது என்று அறிக்கை கிடைத்துள்ளது. இதையடுத்து கலப்பட உணவுப் பொருட்களை தயார் செய்பவர்கள், விற்பனையாளர்கள், ஏஜன்சியினர் ஆகியோர் மீது வழக்கு தொடர குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு உணவு கலப்பட தடுப்புப்பிரிவு சென்னை இணை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அயோடின் இல்லாத உப்பு 2 ஆயிரத்து 400 கிலோ, கலப்பட தேயிலைத்தூள் 253 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் நகரில் வியாபாரிகள் கலப்படமான உணவுப் பொருட்கள் தயாரிப்பது, சேமிப்பது, விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.