தினமணி 13.04.2010
குடிநீரை சோதிக்காமல் நேரடியாக வீடுகளுக்கு அனுப்பக் கூடாது
புதுச்சேரி, ஏப். 12: குடிநீரை சோதிக்காமல் நேரடியாக வீடுகளுக்கு அனுப்பக் கூடாது என்று எம்எல்ஏ ஆர்.சிவா கோரினார்.
புதுச்சேரியில் குடிநீரின் சுவையும், நிறமும் மாறியுள்ளது. அதனால் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நேரடியாக வீடுகளுக்கு செல்லும் குழாய்களில் அனுப்பக்கூடாது. நீரை சோதனைக்கு அனுப்பி, சோதனை முடிவு வந்த பின்னரே பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.
நீரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தேக்கினால் அதன் குணங்கள் தெரியும். நேரடியாக வீடுகளுக்கு செலுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆர்.சிவா தெரிவித்தார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எ.நமச்சிவாயம் பேசியது: நிதிப் பற்றாக்குறையால் எல்லா இடங்களிலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்ட முடியவில்லை. அதனால் குடிநீரை நேரடியாக செலுத்தினோம். அனைத்து ஆழ்துளை கிணறுகளிலும் நீரை சோதனைக்கு அனுப்பி, பரிசோதனை முடிவு வந்த பின்னர் இனி வீடுகளுக்கு செலுத்துகிறோம் என்றார்.