தினமணி 13.04.2010
தேசிய ஊரக சுகாதார திட்டம்: தமிழகத்துக்கு முதல் பரிசு
நாமக்கல், ஏப். 12: தேசிய ஊரக சுகாதார திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதார திóட்டமானது 2005 ஏப்ரல் 12-ம் தேதி துவங்கப்பட்டது. திட்டம் துவங்கி 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்ததிட்டத்தை பயன்படுத்தி மாநிலங்களில் சுகாதாரத்துறை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது, பிற மருத்துவ வசதிகளையும் மேம்படுத்திய மாநிலங்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு புதுதில்லியில் திங்கள்கிழமை நடந்தது. தேசிய ஊரக சுகாதார திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழக அரசுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இதற்கான பரிசை தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜிடம், குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி வழங்கினார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆஷாத், இணையமைச்சர் செ. காந்திச் செல்வன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். வரும் ஆண்டுகளிலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து ஊரக சுகாதாரத் திட்டத்தை கிராமப்புறங்களில் சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் குலாம்நபி ஆஷாத் உறுதியளித்துள்ளார்.