மாலைமலர் 15.04.2010
பெருந்துறையில் அனுமதிபெறாத மாட்டு இறைச்சிகடைகள் அகற்றம்: பேரூராட்சி நடவடிக்கை
பெருந்துறை, ஏப். 15-
பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட ஈரோடுரோடு சந்தை எதிரில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் ஆறு மாட்டு இறைச்சிகடைகள் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த மாட்டிறைச்சி கடைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இருப்பதால் சுகாதார கேடும், அதிக அளவில் கழிவுகளை தேக்கி வைப்பதால் துர் நாற்றம், ஏராளமான ஈக்கள் பரவுவதாலும் மிகவும் இடையூறாக இருப்பதாக கூறி பேரூராட்சியினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதன்பேரில் பெருந்துறை பேரூராட்சி நிர்வாகத்தினர் கடைகளை அகற்ற வேண்டும் என கடைக்காரர்களிடம் கூறியதால் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாங்கள் நீண்ட நாட்களாக அந்த இடத்தில் வியாபாரம் செய்து வருவதாகவும், அதனால் தற்போது கடையை அகற்றினால் தங்களது வருமானம் பாதிக்கும் எனக்கூறி வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2010 பிப்ரவரி 16-ந் தேதி பெருந்துறை பேரூராட்சிக்கு சாதகமாக தீர்ப்பாகியது. அதன்படி தீர்ப்புஅளிக்கப்பட்டதேதியில் இருந்து 15 நாட்களுக் குள் அந்த கடை உரிமையாளர்கள் பெருந்துறை பேரூராட்சி அனுமதி பெற்று பேரூராட்சியினால் அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே கடைவைத்து கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால் பேரூராட்சியினரிடம்எந்தவிதமான அனுமதியும் பெறாத காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்துறை அலுவலர்கள் மற்றும்பெருந்துறை போலீசுடன் பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் நாதவேதலிங்கம் மற்றும் அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சி கடைகளை அகற்ற முற்பட்டனர்.
அப்போது கடை உரிமையாளர்கள் தாங்களே அகற்றுவதற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறியதின் பேரில் கடைஉரிமையாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கடையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல்அலுவலர்நாதவேத லிங்கம் கூறும்போது, தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடிபேரூராட்சி அனுமதி பெறாத இந்த மாட்டிறைச்சிகடைகளை அகற்றுகிறோம். அவர்கள் பேரூராட்சியில் கடைகள் வைக்க அனுமதிபெற்ற பேரூராட்சியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் கடைகள் வைக்க அனுமதி கோரும் பட்சத்தில் உரிய அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.