தினமணி 16.04.2010
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு
அரக்கோணம், ஏப். 15: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் கூறினார்.
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூடுதல் கட்டட திறப்பு விழாவில், அவர் பேசியது:
மருத்துவமனைகள் எவ்வளவு அழகாக கட்டித் தரப்பட்டாலும் அதை சிறப்பாக பராமரித்தால்தான் பயன் கிடைக்கும். வாலாஜாபேட்டை அரசினர் மருத்துவமனையை அனைவரும் வியக்கும் அளவுக்கு சிறப்பாகக் காணப்படுகிறது.
இதேபோல் அரக்கோணம் அரசு மருத்துவமனையின் பராமரிப்பை யாராவது எடுத்துக் கொண்டால் இதுவும் சிறப்பாக இருக்கும்.
உள்ளாட்சித் துறைக்கு அளித்த நிதியை சரியாக செலவு செய்த முதல் மாநிலம் தமிழ்நாடு என மத்திய அரசு பாராட்டியுள்ளது. அந்த நிதியை சரியாக பயன்படுத்திய முதல் மாவட்டம் வேலூர் மாவட்டம்தான்.
தமிழக அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றும் நிலையில், தற்போது அமெரிக்க அரசு கூட பின்பற்ற தொடங்கியுள்ளது என்றார் ஜெகத்ரட்சகன்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் அ.வரதராஜன் வரவேற்றார்.
தமிழ்நாடு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.கென்னடி, எம்எல்ஏக்கள் ஜெகன்மூர்த்தி, அருள்அன்பரசு, ஆர்.காந்தி, முன்னாள் எம்.பி. முகமதுசகி, நகர்மன்றத் தலைவர் விஜயராணி கன்னையன், அரக்கோணம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எம்.எஸ்.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.