தினமணி 21.04.2010
கலப்படம் செய்வோருக்கு ஆயுள் தண்டனை: சட்டம் விரைவில் அமல்
புது தில்லி, ஏப்.20: உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வோர் மீது ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆஸôத் தெரிவித்தார்.உணவுப் பொருளில் கலப்படம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை அபராதத்துடன் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதத்தில் அவர் அளித்த பதில்: உணவு பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் நாடாளுமன்றத்தில் 2006-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் அமல்படுத்தப்படும். இந்த சட்டம் பன்முக தன்மைகளைக் கொண்டது. இதில் உணவு சார்ந்த பல சட்டங்கள் உள்ளன. இதில் உணவு பாதுகாப்பு, தரம், நாடு முழுவதும் ஒரே சீரான லைசென்ஸ் வழங்கும் நடைமுறை ஆகியன உள்ளன.இதில் 101-வது சட்டப் பிரிவின்கீழ் இதுவரை 43 இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள அனைத்து சட்டப் பிரிவுகளும் விரைவில் வெளியிடப்பட்டும்.
இந்த சட்டப் பிரிவு குறித்த விவரம் வெளியிடுவதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு முக்கியக் காரணமே, இவற்றில் பல சுகாதாரத்துறையின் கீழ் வராததே ஆகும். பொது நலன் கருதி இதை வெளியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக இந்திய உணவு தரம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பணி மாற்றம் மூலம் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் இந்த சட்டம் அமலாகும்.
இப்புதிய சட்டத்தின்படி கலப்பட உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் மீது கலப்படப் பொருளின் தன்மைக்கேற்ப ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். மாவட்ட துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரி இந்த அபராதத்தை நிர்ணயிக்கலாம். இதற்குமுன்னர் அபராதத் தொகையை நீதிமன்றமே தீர்மானித்தது. தற்போது அதிகாரிகளே அபராதத்தை தீர்மானிக்கலாம். சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம்.கலப்படம் செய்வோருக்கு குறைந்தது 6 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்துள்ளது.
கலப்படமற்ற சுகாதாரமான உணவுப் பொருள்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டம் அமல்படுத்தப்படுகிறது. அத்துடன் கலப்படமற்ற பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இருக்க வேண்டும். இதற்காகவே கடுமையான சட்டம் கொண்டுவரப்படுகிறது. மேலும் இந்த சட்டத்தில் வழக்குகள் விரைவில் தீர்க்கப்படுவதற்கான அம்சங்களும் உள்ளன.இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் முழு வேகம் காட்டும் என நம்புவதாகக் குறிப்பிட்ட ஆஸôத், இதன் மூலம் உணவுக் கலப்படத்தை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார்.தற்போது 7.21 சதவீத அளவுக்கு கலப்பட பொருள்கள் விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.