தினமணி 23.04.2010
போலி டீத்தூள் தயாரிக்கும் குடோன்
கள்ளக்குறிச்சி, ஏப்.22: கள்ளக்குறிச்சி அருகே போலி டீத்தூள் தயாரிக்கும் குடோனை சோதனையிட்டு பல லட்சம் மதிப்புள்ள டீத்தூள் மற்றும் மூலப் பொருள்களை சுகாதாரத்துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த அம்மையகரம் சமத்துவபுரம் செல்லும் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் போலி டீத்தூள் தயாரித்து வருவதாக கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் எம்.கீதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் கே.தங்கராசு, சின்னசேலம் மருத்துவ அலுவலர் அ.தர்மேந்திரன், சின்னசேலம் உணவு ஆய்வாளர் எம்.லட்சுமணபெருமாள், சுகாதார ஆய்வாளர் கே.மகாலிங்கம், சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எ.லட்சுமி உள்ளிட்ட பலர் குழுவாக சென்றனர்.
÷அங்கு நடராஜன் என்பவரது வீட்டில் போலி டீத்தூள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்தது. நடராஜன் தனது வீட்டை கடந்த 2 ஆண்டு காலமாக சேலம் மாவட்டம் மல்லூரை சேர்ந்த மாதையன் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் மாதையன் போலீ டீத்தூள் தயாரித்து குவியலாகவும், மூட்டை கட்டி வைத்திருந்தாகத் தெரிகிறது.
÷மேலும் அதன் மூலப் பொருட்களான புளியங்கொட்டை, முந்திரிதோல், வாஷிங்சோடா உள்ளிட்டவற்றை வைத்திருந்தாராம்.
÷அவரது வீட்டின் பின்புறம் டீத்தூள் உலர வைத்திருந்ததையும் சுமார் 10 டன் எடையுள்ள டீத்தூளை துணை இயக்குனர் பறிமுதல் செய்தார். சின்னசேலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டீத்தூள் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.