தினமணி 26.04.2010
தரமற்ற பால் விநியோகிப்பதாக புகார்: நகராட்சி அதிகாரிகள் சோதனை
தாராபுரம், ஏப். 25: தாராபுரம் நகரில் தரமற்ற பால் விநியோகம் செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தாராபுரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும், சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் மூலம் பால் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் பால் பண்ணைகள் மூலமும் பால் விற்பனை நடைபெறுகிறது.
மக்களுக்கு விற்பனை செய்யப்படும் பால் தரமில்லாமல் இருப்பதாக, நகராட்சி நிர்வாகத்துக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து நகராட்சி ஆணையர் எஸ்.துரை உத்தரவுப்படி, சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் பால் விநியோகம் செய்வோரிடம் சனிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
பொள்ளாச்சி சாலை, டி.எஸ்.கார்னர், பூளவாடி சாலை, அலங்கியம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பால் விநியோகம் செய்து கொண்டிருந்தவர்களை நிறுத்தி, சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். நூற்றுக்கு மேற்பட்ட பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.