தினமலர் 26.04.2010
கலப்படமான கடலை மாவு விற்பனை ரூ.9 ஆயிரம் அபராதம் விதிப்பு : நெல்லை கோர்ட் தீர்ப்பு
திருநெல்வேலி : நெல்லையில் கலப்படமான கடலை மாவு விற்பனை செய்தவர், தயாரிப்பாளருக்கு ரூ.9 ஆயிரம் அபராதமும், கோர்ட் கலையும் வரை தண்டனையும் விதிக்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி கலுசிவலிங்கம் ஆலோசனையின் பேரில் உணவு ஆய்வாளர் காளிமுத்து, மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோட்டிலுள்ள பலசரக்கு கடையை ஆய்வு செய்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கடலை மாவு பாக்கெட்டுகளை சந்தேகத்தின் பேரில் உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பிவைத்தார். இதில் அதில் கலப்படம் இருப்பதும், உணவு கலப்பட தடை விதிகளுக்கு முறணாக பாக்கெட் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கலப்படமான கடலை மாவு விற்பனை செய்த கடையின் உரிமையாளர் நவமணி மீதும், அதை தயாரித்த மதுரை கம்பெனி மீதும் வழக்கு தொடர அனுமதி கேட்டு சென்னை உணவு கலப்பட தடைச் சட்ட இணை இயக்குனர் கண்ணனுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையின் படி கலப்படமான கடலை மாவு விற்பனையாளர், தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர நெல்லை ஜே.எம்.5 கோர்ட்டில் மாநகராட்சி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி ஹேமா, விற்பனையாளர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு ரூ.9 ஆயிரம் அபராதமும், கோர்ட் கலையும் வரை தண்டனையும் வழங்கினார்.