தினமணி 29.04.2010
குடிசை வீடுகளில் மருத்துவக் குழு ஆய்வு
நாகர்கோவில், ஏப். 28: நாகர்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட பறக்கின்கால் பகுதியிலுள்ள குடிசை
வீடுகளில் மருத்துவக் குழுவின் ஆய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
உலக சுகாதார தினத்தையொட்டி நகர்ப்புற குடிசைவாழ் பகுதி மக்களின் ஆரோக்கிய மேம்பாடு குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சமூக மருந்தியல் துறைத் தலைவர் டாக்டர் சுரேஷ்பாலன் தலைமையில் மருத்துவர்கள் ராஜகோபால், சாந்தி, நித்யா, பெபின்சி, பூச்சியியல் வல்லுநர் லிபி மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 30 பேர் அடங்கிய குழுவினர் நாகர்கோவிலில் குடிசைப் பகுதிகளில் 3 நாள்கள் இந்த ஆய்வில் ஈடுபடுகின்றனர்.
பறக்கின்கால் பகுதியிலுள்ள 300 குடிசைகளில் இந்த ஆய்வு திங்கள்கிழமை தொடங்கியது. குடிசைவாசிகளின் உடல்நலம், உடல் நலம் பேணுதல், சுகாதார மேம்பாடு, சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மருத்துவக் குழுவினர் விவரங்களை சேகரித்தனர். முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறுகின்றனரா என்றும் கேட்கப்பட்டது.
மேலும், 2-ம் கட்டமாக சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேபோல, வேறுபல நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கத் தேவையானோரை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.