Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தலைதூக்கும் டெங்கு, சிக்குன்-குன்யா...தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறை தீவிரம்

Print PDF

தினமலர்            01.10.2013  

தலைதூக்கும் டெங்கு, சிக்குன்-குன்யா...தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறை தீவிரம்


டெங்கு, சிக்குன்-குன்யா காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை, சுகாதாரத் துறை முடுக்கி விட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மழைக் காலத்தின்போது, மலேரியா, டெங்கு, சிக்குன்-குன்யா போன்ற காய்ச்சல்கள், கொசுக்கள் மூலம் வேகமாக பரவுவது வழக்கம்.

மழை காலத்தில், அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். இந்த காலக்கட்டத்தில், அதாவது, செப்டம்பரில் ஆரம்பித்து, ஜனவரி வரை, ஐந்து மாதங்களுக்கு காய்ச்சல் பரவுவது அதிகமாக இருக்கும்.

தொடர்ந்து மழை பெய்தால், கொசுக்களின் முட்டைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும். ஓடும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகாது. மழை விட்டுவிட்டு பெய்யும்போது, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும்.

கடந்த சில மாதங்களாக, மழை பெய்வதும், நிற்பதுமாக இருப்பதால், கொசுக்கள் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, புதுச்சேரி, காரைக்காலில் டெங்கு, சிக்குன்-குன்யா பாதிப்பு தலைதூக்கி உள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும், காரைக்காலில் ஒருவரும், புதுச்சேரியில் 16 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை, 114 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இவர்கள் அனைவரும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து, வீடு திரும்பி விட்டனர். உயிரிழப்புகள் ஏதுமில்லை.

கடந்தாண்டு, 1350 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இதில், 2 பேர் உயிரிழந்தனர்.அதுபோல, சிக்குன்-குன்யாவில், இந்தாண்டு இதுவரை, 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு, 6 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, கொசு மற்றும் பூச்சுகளால் பரவும் தேசிய நோய் தடுப்புத் திட்டத்தின் உதவி இயக்குனர் டாக்டர் காளிமுத்து கூறும்போது, "மலேரியா, டெங்கு, சிக்குன்-குன்யா போன்றவை, கொசுக்கள் மூலமாக பரவுகின்றன. வீடுகளிலும், வீடுகளை சுற்றியுள்ள இடங்களிலும் தண்ணீர் தேங்குவதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.

எனவே, தண்ணீர் தேங்குவதை தடுப்பது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒன்னரை லட்சம் அச்சடித்து பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஓட்டல், டீக்கடை, வல்கனைசிங் கடை, சிமென்ட் ஜாலிக்கள் செய்யும் கடை, பழைய பொருட்கள் விற்கும் கடை, இளநீர் வியாபாரம் செய்யும் இடங்களில் மழை நீர் தேங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவர்களை அழைத்து விரைவில் கூட்டம் நடத்த உள்ளோம்.

மேலும், பொதுப்பணி, உள்ளாட்சி, கல்வி ஆகிய துறையினருடன், ஒருங்கிணைந்து, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து, ஆரம்பக்கட்ட கூட்டம் நடத்தி உள்ளோம்.

அரசு பொது மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் ஆகிய இடங்களில், டெங்கு காய்ச்சலுக்கான ரத்தப் பரிசோதனை மையங்கள் அமைந்துள்ளன. இங்கு அனைத்து உபகரணங்கள், மருந்துகள் தேவையான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும், சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தினசரி சென்று, காய்ச்சல் பாதிப்பு குறித்து ஊழிர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், அதிவேக சிறப்பு பணிக் குழுவும் அமைக்கப்பட்டு, நிலைமையை கண்காணித்து வருகிறோம்.

தற்போது, நிலைமை கட்டுக்குள் உள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேசமயம், விழிப்புணர்வுடன் இருந்து, கொசுக்கள் உற்பத்தியாகாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.

 

கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: நகர்மன்றத் தலைவர்

Print PDF

தினமணி             27.09.2013

கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: நகர்மன்றத் தலைவர்

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, நகர்மன்றக் கூட்டத்தில் அதன் தலைவர்(பொறுப்பு) எட்வர்டு தெரிவித்தார்.

  கொடைக்கானல் நகர்மன்றக் கூட்டம், தலைவர் (பொறுப்பு) எட்வர்ட் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார்.

  கூட்டத்தில், கொடைக்கானல் சுற்றுலா இடமான குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் கழிப்பறைகள் இல்லாத காரணத்தால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தயங்குகின்றனர் என உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.  அதையடுத்து, கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களில் கழிப்பறைகள் கட்ட வேண்டும். ஏரிச்சாலை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினர்.

  இதற்கு, அனைத்து சுற்றுலா இடங்களிலும் கழிப்பறைகள் கட்டுவதற்கு தற்போது இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மதிப்பீடு ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.விரைவில், சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதிலளித்தார்.

  தொடர்ந்து, ஏரிச்சாலைப் பகுதியில் உள்ள 5-டி தியேட்டர் நிலை தற்போது எவ்வாறு உள்ளது என உறுப்பினர் கேட்டனர். 5-டி தியேட்டர் சம்பந்தமான வழக்கு  நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அது குறித்து எந்த உறுப்பினர்களும் பேசவேண்டாம் என தலைவர் அறிவுறுத்தினார்.  பின்னர், கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதனால், வீடு கட்டியவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என உறுப்பினர் ஒருவர் புகார் தெரிவித்தார்.

  கொடைக்கானலிலுள்ள 24 வார்டுகளிலும் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அரசு கொடுக்கப்பட்டுள்ள விதிகளுக்குள்பட்டு தொகுப்பு வீடு கட்டியுள்ளவர்களுக்கு தொகை வழங்கப்படும் என்றார் தலைவர். மேலும், பல இடங்களில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சிலர் பணம் பெற்றுக்கொண்டு வீடு கட்டாமல் இருந்து வருவதாகத் தெரிகிறது என உறுப்பினர் தெரிவித்தார்.  இதற்கு, 20 தொகுப்பு வீடுகள் கட்டப்படாமல் உள்ளதாக தற்போது கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

  தொடர்ந்து, இப்பணி நடைபெற்று வருகிறது. பொது மக்கள் பாதிக்காத வகையில், வீடு கட்டுவதற்கு தொகை வழங்கப்படும் என பதிலளித்தார் ஆணையர்.

 

சுகாதாரத்தை மேம்படுத்த மாநகராட்சி முயற்சி! 18 இடங்களில் "நம்ம டாய்லெட்' வசதி

Print PDF

தினமலர்           27.09.2013

சுகாதாரத்தை மேம்படுத்த மாநகராட்சி முயற்சி! 18 இடங்களில் "நம்ம டாய்லெட்' வசதி

திருப்பூர் :திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அதிநவீன முறையில், 3.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 இடங்களில் "நம்ம டாய்லெட்' என்ற பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

திருப்பூர் மாநகராட்சியில், திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்கும் வகையில், பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு உத்தரவுப்படி, அதிநவீன முறையில் கட்டமைக்கப்படும் "நம்ம டாய்லெட்' என்ற பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளன. வழக்கமான சிமென்ட், செங்கல் மூலமாக அல்லாமல், "காம்போசிட் மெட்டீரியல்' மூலமாக "மோல்டிங்' முறையில் கழிப்பிடங்கள் அமைக்கப்படும்.

கழிப்பறைகள் 1.21 மீட்டர் நீளம் மற்றும் ஒரு மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும். இட வசதியை பொறுத்து, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, தனித்தனியாக இரண்டு சாதாரண கழிப்பறைகளும், ஒரு மாற்றுத்திறனாளி கழிப்பறையும் அமைக்கப்படும். முக்கியமான இடங்களில், குளியலறை, கழிப்பிடம் உள்ளிட்டவை அமைந்த சுகாதார வளாகமும் அமைக்கப்பட உள்ளன.

சோலார் மின்னுற்பத்தியுடன், முழுவதும் நவீனமாக அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, எளிதாக பராமரிக்கும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. பெண்கள் "நாப்கின்'களை அப்புறப்படுத்த ஏதுவாக, கழிப்பறைகளில் இருந்தே, வெளியே உள்ள தொட்டியில் போடவும் வசதி செய்யப்படும். அதே பகுதியில், "நாப்கின்'களை எரிக்கவும் வழிவகை செய்யப்பட உள்ளது.

ஒவ்வொரு கழிப்பிடத்துக்கும், போதுமான அளவு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில், குழாய்கள் அமைக்கப்படும். பாதாள சாக்கடை கால்வாய் வசதியுள்ள பகுதிகளில், "நம்ம டாய்லெட்' கழிவுகள் அதன் மூலம் வெளியேற்றப்படும். பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரிப்பு மையம் ஏற்படுத்தி, கழிவுநீரை அங்குள்ள செடிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி செயற்பொறியாளர் தமிழ்செல்வன் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சியை நவீனமாக்கும் வகையில், "நம்ம டாய்லெட்' திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் "நம்ம டாய்லெட்' அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது; பொதுமக்களிடம் அதிக வரவேற்பையும் பெற்றுள்ளது. இதேபோல், திருப்பூரில் ஏழு இடங்களில் சுகாதார வளாகம், 11 இடங்களில் கழிப்பிட வசதி, 3.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும், 41 இடங்களில் "நம்ம டாய்லெட்' என்ற பொதுக்கழிப்பிடத்தை அமைக்க, தமிழக அரசிடம் 6.50 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடர்ந்து, பழைய பஸ் ஸ்டாண்டில் "இ-டாய்லெட்' அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் காசுகளை செலுத்தினால் மட்டும் கதவு திறப்பது உள்ளிட்ட வசதிகளுடன் "இ-டாய்லெட்' அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

பழைய பஸ் ஸ்டாண்டில் "இ-டாய்லெட்' அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் காசுகளை செலுத்தினால் மட்டும் கதவு திறப்பது உள்ளிட்ட வசதிகளுடன் "இ-டாய்லெட்' அமைக்கப்படும்.

 


Page 36 of 519