Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தலைவாசல், வீரகனூர் ஓட்டல்களில் சுகாதாரத் துறை ஆய்வு

Print PDF

தினமணி 12.02.2010

தலைவாசல், வீரகனூர் ஓட்டல்களில் சுகாதாரத் துறை ஆய்வு

தம்மம்பட்டி, பிப்.11: சேலம் மாவட்டம் தலைவாசல், வீரகனூர், சிறுவாச்சூர் பகுதிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீக்கடைகளில் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது குடிநீர் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறதா, உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாக உள்ளதா, சாக்கடை நீர் முறையாக வெளியேறுகிறதா, பாத்திரங்கள் சுடுநீரில் கழுவப்படுகிறதா, உணவு பரிமாறுபவர்கள் எப்போதும் சுத்தமாக இருக்கிறார்களா, ஓட்டல் உரிமம் கட்டாயம் இருக்கிறதா, ஓட்டல், டீக்கடைகளில் உபயோகப்படுத்தும் மளிகை சாமான்கள் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா அப்பொருட்களின் தயாரிப்பு பொருள் பெயர், அதன் தயாரிப்பு நாள் போன்ற விவரங்கள், எச்சில் இலைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா, பலகாரங்கள் கண்ணாடி போட்டு மூடி விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். இதுபோன்று இல்லாத ஓட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

Last Updated on Friday, 12 February 2010 10:31
 

நெல்லை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பயிற்சி பூச்சியியல் வல்லுநர் அறிவுரை

Print PDF

தினமலர் 12.02.2010

நெல்லை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பயிற்சி பூச்சியியல் வல்லுநர் அறிவுரை

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சிப்பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது.மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் கலு.சிவலிங்கம் தலைமை வகித்தார். தச்சை மண்டல உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் ஓய்வுபெற்ற பூச்சியியல் துறை வல்லுநர் கந்தசாமி, கொசு ஒழிப்பு முறைகள் குறித்து பேசுகையில், "கொசு உற்பத்தியை தடுக்க வீட்டிற்குள் வேண்டாத பிளாஸ்டிக் டப்பாக்கள், தேய்ந்துபோன டயர்கள், உடைந்த மண்சட்டி, பானைகள், ஆட்டு உரலை அகற்றவேண்டும். மூடப்படாத சிமென்ட் தண்ணீர் தொட்டிகள், மேல்நிலை நீர்த் தொட்டிகளை மூடி வைக்கவேண்டும்.

வாரம் ஒரு முறை சிமென்ட் தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக கழுவி துடைத்துவிட்டு நன்கு காய வைத்த பின் உபயோகிப்பதால் கொசு உற்பத்தியை வெகுவாக குறைக்கலாம். கொசு மருந்து தெளிப்பது மூலமும் கொசுவின் உற்பத்தியை குறைக்க இயலும். மாநகராட்சி பணியாளர்கள் மருந்து தெளிக்க வரும்போது, அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு கொடுத்து தெளிக்கவேண்டும்.

காலை, மாலை நேரங்களில் புகை மருந்து அடிக்க வரும்போது வீட்டிலுள்ள ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றை திறந்து வைத்திருக்கவேண்டும். வீட்டின் உள்ளே கொசுக்கள் அழிவதற்கு இது உதவியாக இருக்கும். காய்ச்சல் இருப்பின் ஆஸ்பத்திரிகளிலோ, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலோ காட்டி உரிய சிகிச்சை பெறவேண்டும் என்றார்'.கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், .ஆர்.சங்கரலிங்கம், சாகுல்ஹமீது, சுப்பிரமணியன், முருகேசன், கலியனாண்டி, முருகன் மற்றும் சுகாதார பார்வையாளர்கள், துர்புரவுப்பணி மேற்பார்வையளர்கள், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 12 February 2010 07:37
 

கலப்படமான டீ விற்பனை செய்த2 பேர் மீது மாநகராட்சி வழக்கு

Print PDF

தினமலர் 12.02.2010

கலப்படமான டீ விற்பனை செய்த2 பேர் மீது மாநகராட்சி வழக்கு

திருநெல்வேலி:கலப்படமான டீ விற்பனை செய்த விற்பனையாளர், உரிமையாளர் மீது நெல்லை கோர்ட்டில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.சென்னை பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ, இணை இயக்குனர் டாக்டர் கண்ணன் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேயிலையில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். நெல்லை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் டாக்டர் கலு.

சிவலிங்கம் தலைமையில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் சங்கலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது அடங்கிய குழுவினர் நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டு வளாகத்திலுள்ள டீக்கடைகளில் தேயிலையின் தரம் குறித்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது காப்பி மற்றும் டீ ஸ்டாலில் விற்பனை செய்த டீயில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் உத்தரவின் பேரில் உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பினர்.

பகுப்பாய்வில் உணவு மாதரியாக எடுத்து அனுப்பிய டீயில் செயற்கை வண்ணங்கள் கலப்படம் செய்துள்ளது தெரியவந்தது. கலப்படமான டீ விற்பனை செய்த விற்பனையாளர் பகவதி, கடையின் உரிமையாளர் தர்மராஜ் மீது உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர, சென்னை உணவுக் கலப்பட தடைச் சட்ட இணை இயக்குனருக்கு, மாநகராட்சி உணவு ஆய்வளார் பரிந்துரை செய்தார். அவரது அனுமதியின் பேரில் கலப்படமான டீ விற்பனை செய்த பகவதி மற்றும் கடை உரிமையாளர் தர்மராஜ் மீது நெல்லை ஜே.எம்.4 கோர்ட்டில் உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 12 February 2010 07:31
 


Page 354 of 519