காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'குப்பை தகவல் எண் அறிமுகம் : அத்துமீறி குப்பை கொட்டினால் தகவல் தரலாம்
Thursday, 11 February 2010 07:49
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 11.02.2010 காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'குப்பை தகவல் எண் அறிமுகம் : அத்துமீறி குப்பை கொட்டினால் தகவல் தரலாம்
சென்னை : ""தமிழகத்திலேயே முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், "கார்பேஜ் ஹெல்ப் லைன்' எனப்படும் குப்பைகள் பற்றி தகவல்களைத் தெரிவிக்க, தனி டெலிபோன் எண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், மாவட்டம் முழுவதும், நீர் நிலைகளிலும், சாலையோரங்களிலும் அத்துமீறி குப்பை கொட்டுபவர்கள் குறித்து, போன் மூலம் பொதுமக்கள் தகவல் கொடுக்க முடியும்,'' என்று காஞ்சிபுரம் கலெக் டர் சந்தோஷ் கே மிஸ்ரா கூறினார்.தென்சென்னை புறநகரில் குப்பை மற்றும் கழிவு நீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது குறித்து, "தினமலர்' நாளிதழ் அவ்வப்போது படத்துடன் விரிவான செய்திகளை வெளியிட்டு வருகிறது.அதிகரித்து வரும் குப்பை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கடந்த சில மாதங் களாக மும்முரமாக களம் இறங்கியுள்ளது. இம்மாவட்ட கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா, புறநகர் உள்ளாட்சி அதிகாரிகள், நிர்வாகிகள், மாசு கட்டுப்பாடு வாரியம், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, போலீஸ் துறை அதிகாரிகளுடன் சுழற்சி முறையில் ஆய்வு நடத்தி வருகிறார்.முதற்கட்டமாக, உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்த முடிவாகியுள்ளது. ஒக்கியம் துரைப்பாக்கம், பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, உத்தண்டி, ஜல்லடியன்பேட்டை, மடிப்பாக்கம், ஈஞ்சம் பாக்கம், செம்மஞ்சேரி, காரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டி, திடக்கழிவு மேலாண்மை செய்ய, சோழிங்கநல்லூரில் 25 ஏக்கர் இடம் தேர்வு செய்யப் பட்டது.இந்த இடத்தை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். பின், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், ஒக்கியம் துரைப் பாக்கம் ஊராட்சித் தலைவர் ஏகாம்பரம், துணைத் தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா அளித்த பேட்டி:உள்ளாட்சிகளில் குப்பை கொட்டும் பிரச்னை சமீபகாலமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. முடிச்சூர், பம்மல் போன்ற சில உள்ளாட்சிகள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கின்றன.இதற்கு வீடு ஒன்றிற்கு மாதம் 20 ரூபாய் மட்டுமே வசூலிக்கின்றனர். இதுபோன்ற திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த, பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். முடிச்சூர் ஊராட்சியைப் போன்று அனைத்து உள்ளாட்சிகளிலும் குப்பைகளை சேகரித்து, அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.சோழிங்கநல்லூரில் தேர்வு செய்யப் பட்டுள்ள இடத்தில் சுற்றுச்சுவர், கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. உள்ளாட்சிகளின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். நிதி பற்றாக்குறையுள்ள நீலாங்கரை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய ஊராட்சிகளுக்கு, அரசின் சிறப்பு நிதி பெற்றுத் தரப்படும்.இந்த திட்டத்தின் மூலம் இந்த உள்ளாட்சிகளில், சாலை ஓரங்களிலும், நீர் நிலைகளிலும் குப்பைகளை கொட்டுவதை தடுக்கலாம். தமிழகத்திலேயே முதல் முறையாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனி போன் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.உள்ளாட்சிகளில் அத்துமீறி பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் குறித்து பொதுமக்களும், நலச்சங்கங் களும் 88708-03555 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு, அலுவலக நேரங்களில் புகார் தெரிவிக்கலாம்.இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.
சிட்லபாக்கத்தில் நவீன உரக்கிடங்கு :புறநகரில் ஓட்டல்கள் அதிகமாக உள்ளதால், அவற்றில் இருந்து வெளியேறும் உணவுக் கழிவுகள், பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. கலெக்டர் சந்தோஷ் கே மிஸ்ரா ஆலோசனையின்படி, உணவுக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் வகையில் தமிழகத்திலேயே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் பேரூராட்சியில் ஒரு முன்மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 19 லட்சம் ரூபாய் செலவில் விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளன. இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், ஓட்டல் கழிவுகள் அதிகமாக வெளியேறும் உள்ளாட்சிகளிலும் இதை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அபார்ட்மென்ட்களுக்கு எச்சரிக்கை! : உள்ளாட்சிகள் சார்பில் கட்டப் பட்டுள்ள மழைநீர் கால்வாய், கழிவு நீர் கால்வாய்களில், அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலக்க விடப்படுகிறது. இது குறித்து எழுந்த புகாரைத் தொடர்ந்து, "அடுக்கு மாடி குடியிருப்புகள், தேவைக்கேற்ற அளவில் கழிவு நீர் தொட்டிகள் அமைத்து, அதில் கழிவு நீரை சேகரித்து, முறையாக வெளியேற்ற வேண்டும்.இதற்கு உள்ளாட்சி நிர்வாகங் களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அத்துமீறி கழிவுநீரை கலக்கவிட்டால், உள்ளாட்சி நிர்வாகிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம்' என்றார்.
Last Updated on Thursday, 11 February 2010 07:52
கால்வாயில் குப்பை கொட்டினால் அபராதம், வழக்கு
Wednesday, 10 February 2010 12:06
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 10.02.2010 கால்வாயில் குப்பை கொட்டினால் அபராதம், வழக்கு கடையநல்லூர், பிப். 9: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில், கடையநல்லூரிலுள்ள பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாயை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாய்களில் குப்பை, கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும் என்று நகராட்சி எச்சரித்துள்ளது. கடையநல்லூரில் பரவி வரும் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தொடர்ந்து பாப்பான்கால்வாய் மற்றும் சீவலன்கால்வாயை சுத்தம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் 30 பணியாளர்கள் மூலம் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணியினை நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், ஆணையர் அப்துல்லத்தீப், இளநிலைப் பொறியாளர் அகமதுஅலி, சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையாபாஸ்கர், கைலாசசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர். அபராதம்: கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டினாலோ, கழிவறை கழிவுகளை நேரடியாக விட்டாலோ அதற்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என நகராட்சி அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Last Updated on Wednesday, 10 February 2010 12:08
|
|