மலத்தொட்டி கழிவு நீர் வெளியேற ம வடிவ குழாய் பொருத்த யோசனை
Wednesday, 10 February 2010 11:06
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 10.02.2010 மலத்தொட்டி கழிவு நீர் வெளியேற ம வடிவ குழாய் பொருத்த யோசனை புதுச்சேரி, பிப். 9: மலத்தொட்டி கழிவு நீரை வெளியேற்ற 'ம' வடிவ குழாய் பொருத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையை கொசு ஒழிப்புத்துறை உதவி இயக்குநர் என்.நீலாமணி தெரிவித்தார். புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்களுடனான கொசு ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உதவி இயக்குநர் என் நீலாமணி பேசியது: புதுச்சேரி பகுதியில் கொசுக்களை ஒழிக்க இம்மாதம் 10-ம் தேதி முதல் 16 தேதி வரை தீவிர கொசு ஒழிப்பு வாரம் நடத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த கொசு ஒழிப்பு வாரத்தில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை சேர்ந்து கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும். அதிகப்படியான கொசுக்கள் மலத்தொட்டியிலிருந்துதான் உருவாகின்றன. அதை தடுக்கும் விதமாக "ம' வடிவ குழாயை பொருத்தி கழிவு நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.150 வரை செலவாகும். ஆனால் இதை ஆர்டர் கொடுத்து அதிக அளவில் செய்யும்போது, இதன் விலை ரூ.30-க்கு வந்துவிடும். இந்த "ம' வடிவ குழாய்களை பயன்படுத்துவதால் குழாயில் எப்பொழுதும் நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் தொட்டிக்குள் சென்று இனப்பெருக்கம் செய்வது தடுக்கப்படும். இதனால் பெருமளவு கொசுக்களை ஒழிக்க முடியும். மேலும் மேல்நிலைத் தொட்டிகளையும், கீழ்நிலை தொட்டிகளையும் மூடி வைக்க வேண்டும். கிணறுகளை வலை போட்டு மூடி வைக்க வேண்டும். பயன்படுத்திய நீரை தேங்காமல் அப்புறப்படுத்துவதால் கொசுக்கள் உருவாகாமல் தடுத்த முடியும். பயனற்ற பொருள்களை மட்காத குப்பை மற்றும் மட்கும் குப்பை என பிரித்து அப்புறப்படுத்துவதாலும், ஆட்டுரலை மழை நீர் தேங்காமல் கவிழ்த்து வைப்பதாலும் கொசுக்களை தடுக்க முடியும். குடிக்க பயன்படுத்தும் நீரில் உருவாகும் கொசுக்களை தடுக்க கம்பூசியா என்ற மீன் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட இருக்கிறது. தற்போது மேற்கொள்ளப்படும் கொசு ஒழிக்கும் பணிக்கு நகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் முழு ஆதரவை அளிக்க வேண்டும் என்றார். நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதேவி, நகராட்சி ஆணையர் அசோகன், உள்ளாட்சித்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியம் நகர் நல அலுவலர் இளங்கோவன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Last Updated on Wednesday, 10 February 2010 11:11
|
துப்புரவு தொழிலாளர்களுக்காக போதை மறுவாழ்வு மையம் துவக்கம்
Wednesday, 10 February 2010 10:05
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 10.02.2010 துப்புரவு தொழிலாளர்களுக்காக போதை மறுவாழ்வு மையம் துவக்கம்
கோவை : மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் ஆண், பெண் இருபாலரும் மது மற்றும் போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தால், அவர்களை மீட்பதற்காக போதை மறுவாழ்வு மையம் கோவை நகரில் புதியதாக துவக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 2 ஆயிரத்து 935 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் 141 பேர் மது மற்றும் தீவிர போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது தெரியவந்தது. இவர்களை போதை பழக்கத்திலிருந்து மீட்பதற்காக மாநகராட்சி 50 வது வார்டுக்குட்பட்ட லாலிரோட்டில் உள்ள துணை மகப்பேறு மருத்துவ மையம், போதை மறுவாழ்வு மையமாக மாற்றியமைக்கப்பட்டது. இவர்களுக்கு முதல்கட்டமாக மாநகராட்சி டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் மிகவும் மோசமான நிலையிலிருக்கும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுமாநகராட்சி போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அன்றாடம் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுபவர்கள் வெளியேறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு கருதி இரு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். போதை மறுவாழ்வு மையத்தில் மூன்று மாநகராட்சி டாக்டர்கள், இரண்டு நர்ஸ்கள், இரண்டு மருந்தாளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவ சிகிச்சையளிப்பதோடு, அவர்களோடு கலந்துரையாடி மனிதனின் குணத்தையும், மனதையும் மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இம்மையத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை தங்கி சிகிச்சை பெறலாம். மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களின், பழைய வாழ்வை மீட்க மாநகராட்சி நிர்வாகம் போராடி வருகிறது.
Last Updated on Wednesday, 10 February 2010 10:08
1.50 லட்சம் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்
Tuesday, 09 February 2010 10:20
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 09.02.2010 1.50 லட்சம் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்
நாமக்கல்: மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடந்த சொட்டு மருந்து வழங்கும் முகாமில், மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இதற்காக கிராமப் பகுதியில் 1,068 முகாம்கள், நகர பகுதியில் 87 முகாம் என மொத்தம் 1,155 முகாம் அமைக்கப்பட்டது. பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சி துறை என மொத்தம் 4,800 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன், கோவில் வளாகம் மற்றும் தியேட்டர்களில் இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், 102 நடமாடும் சொட்டு மருந்து குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக பிற துறையை சார்ந்த 109 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் நடந்த முகாமில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 1ம் தேதி நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 296 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
|
Page 357 of 519 |