தினமலர் 26.09.2013
சென்னை முழுவதும் 750 இடங்களில் ‘நம்ம டாய்லெட்’
சென்னை:தாம்பரம் நகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘நம்ம டாய்லெட்’ நவீன கழிப்பறை திட்டத்தை சென்னையில், 750 இடங்களில் அமைக்க மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. அதேநேரம், மாநகராட்சியின் இலவச கழிப்பறைகளில் நடக்கும் வசூல் வேட்டையை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திடீர் முடிவு
சென்னை மாநகராட்சியில் தற்போது, 900 பொதுக் கழிப்பறைகள் உள்ளன. இவற்றில் பல கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் உள்ளன.
சமீபத்தில் அவை சீரமைக்கப்பட்டன. மாநகராட்சி கூட்டங்களில், கழிப்பறைகள் இலவசம் என, மேயர் அடிக்கடி அறிவித்தாலும், அவை இன்னும் கவுன்சிலர்களின் கட்டுப்பாட்டில் வசூலை வாரி குவித்து வருகின்றன. இந்த நிலையில், தாம்பரம் நகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தை சென்னை முழுவதும் அறிமுகப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக 750 இடங்களில் ‘நம்ம டாய்லெட்’ அமைய உள்ளது. அதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட், ரயில் நிலையம், கழிப்பறைகள் பயன்படக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நம்ம டாய்லெட்’ திட்டத்தை செயல்படுத்துவதில் மாநகராட்சி மூன்று வழிமுறைகளை வகுத்துள்ளது. கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் ஆகிய மூன்றையும் ஒரே நிறுவனத்திற்கு வழங்குதல், அந்த நிறுவனம் விளம்பர வருவாயை ஈட்டிக் கொள்ளலாம்.
கட்டுதல், பராமரித்தல் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதற்கு மாநகராட்சி பணம் வழங்கும். விளம்பர வருவாயை மாநகராட்சி நேரடியாக ஈட்டும்.
கட்டுதல் ஒரு நிறுவனத்திற்கும், பராமரித்தல் ஒரு நிறுவனத்திற்கும், விளம்பர வருவாய் ஈட்டுதல் ஒரு நிறுவனத்திற்கும் வழங்குவது இவற்றில் ஒன்றை, தேர்ந்தெடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில், ‘நம்ம டாய்லெட்’ செயல்பாட்டிற்கு வந்தால், தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் அது இருக்கும். அங்கு கவுன்சிலர்கள் ஆட்களை நியமித்து வசூல் செய்ய முடியாது என்பதே, இந்த திட்டத்தை செயல்படுத்துவதின் முக்கிய நோக்கம்.
எதிர்பார்ப்பு
அதே நேரம், தற்போதுள்ள கழிப்பறைகளில் நடக்கும் வசூலை எப்படி தடுப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அதிகமாக வசூலாகும் கழிப்பறைகள், அவற்றில் வசூல் நடத்தும் கவுன்சிலர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பட்டியலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அடாவடி கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், கழிப்பறை வசூலை தடுக்க முடியும் என்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.