Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நாகை: 964 மையங்களில் அளிப்பு

Print PDF

தினமணி 08.02.2010

நாகை: 964 மையங்களில் அளிப்பு

நாகப்பட்டினம், பிப். 7: நாகை மாவட்டத்தில் 2-வது தவணை போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி 964 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, நாகை மாவட்டத்தில் ஜன. 10ஆம் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி நடைபெற்றது. 1.54 லட்சம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து புகட்டுவதை இலக்காகக் கொண்டு நடைபெற்ற இப்பணியின் போது 1,55,153 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து புகட்டப்பட்டது. 2-

வது தவணையாக போலியோ சொட்டு மருந்து புகட்டும் பணி நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், ஊட்டச்சத்து மையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்பட 964 மையங்களில் இந்தப் பணி நடைபெற்றது.

1.54 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டுவதை இலக்காகக் கொண்டு இப்பணி நடைபெற்றது. காலை நேரத்தில் ஏராளமானோர் வரிசையில் நின்று தங்கள் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து புகட்டிச் சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, முகாம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று, சொட்டு மருந்து புகட்டிடாத குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து புகட்டும் பணியை முகாம் பணியிலிருந்த ஊழியர்கள் மேற்கொண்டனர்.

மருத்துவத் துறை, கல்வித் துறை, வருவாய்த் துறை ஊழியர்கள், ஊட்டச்சத்துப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர், சொட்டு மருந்து புகட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நாகை மாவட்டம், சீர்காழி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமில், சொட்டு மருந்து புகட்டும் பணியை நாகை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் தொடக்கி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அண்ணாதுரை, சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் வே. வைரமணி, உதவி இயக்குநர் ராம்தாஸ், மருத்துவர்கள் ராஜகுமாரி, ராஜமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 08 February 2010 10:04
 

பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை

Print PDF

தினமணி 08.02.2010

பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை

நாகப்பட்டினம், பிப். 7: நாகை மாவட்டத்தில் வணிகர்களிடையே பிளாஸ்டிக் பொருள்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கங்கள் நடத்தப்படவுள்ளன என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

நாகை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டமாக, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்படுகின்றன.

கடந்த வாரம் வேளாங்கண்ணியில் ஓர் ஆய்வு மேற்கொண்ட போது 5 கிலோ குப்பையில் சுமார் 70 சதம் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தது தெரிய வந்தது. மேலும், சில இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் மணலுக்குக் கீழே புதைக்கப்படுவதும் தெரிய வந்தது.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம். அந்த வகையில், விரைவில் வணிகர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் நடத்தப்படும் என்றார் ஆட்சியர் முனியநாதன். இதைத்தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருள்கள் விழிணர்வுப் பேரணியை ஆட்சியர் தொடக்கிவைத்தார்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேனிலைப் பள்ளி மாணவர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர். பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயம் முன்பு நிறைவடைந்தது.

Last Updated on Monday, 08 February 2010 10:02
 

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினமணி 08.02.2010

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருச்சி
, பிப். 7: திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களில் ஏறத்தாழ 2 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
இரண்டாவது கட்டமாக நடைபெற்ற இந்த முகாமுக்காக மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1270 மையங்களும், மாநகராட்சியில் 216 மையங்களும், துறையூர் நகராட்சியில் 9 மையங்களும், மணப்பாறையில் 24 மையங்களும் என மொத்தம் 1519 மையங்கள் அமைக்கப்பட்டன.

மாவட்ட, மாநகராட்சி அலுவலர்களுடன், தன்னார்வத் தொண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த முகாமில் பங்கேற்று பணியாற்றினர். மாவட்டம் முழுவதும் 2.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஏறத்தாழ 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விடுபட்ட குழந்தைகளுக்காக தொடர்ந்து திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து புகட்டப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Last Updated on Monday, 08 February 2010 09:59
 


Page 364 of 519