Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

இரண்டாம் கட்டமாக 1867 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

Print PDF

தினமலர் 08.02.2010

இரண்டாம் கட்டமாக 1867 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

மதுரை : இளம்பிள்ளை வாதத்தை தடுக்க, மதுரை நகரில் 267 மையங்கள், புறநகரில் 1600 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட மூன்று லட்சம் குழந்தைகளுக்கு, இரண்டாவது கட்டமாக நேற்று இலவச போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

தினமலர் அலுவலகத்தில், நர்சுகள் கலாராணி, பிருந்தா ஆகியோர் சொட்டு மருந்து வழங்கினர். மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் நாகலட்சுமி, ஜோதிலட்சுமி உதவியாக இருந்தனர். மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில், துறைத் தலைவர் டாக்டர் அமுதா ராஜேஸ்வரி தலைமையில் டீன் சிவக்குமார் வழங்கினார். விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் வீடுகளுக்கே சென்று மருந்து கொடுக்கப்படுகிறது.

சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பழனிச்சாமி தலைமையில், சுகாதாரம் மற்றும் சத்துணவு பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 6675 பேர் இப்பணியில் ஈடுபடுகின்றனர். இந்தாண்டும் வெளிமாநிலத்தவர், இலங்கை அகதிகள் மற்றும் நரிக்குறவர்களின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 541 வெளிமாநிலத்தவர் குழந்தைகள், 698 இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி சார்பில் சுந்தரராஜபுரம் மகப்பேறு மருத்துவமனையில், மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன் துவக்கி வைத்தனர். விடுபட்டவர்களுக்கு ஒரு வாரம் வீடு வீடாக சென்று வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில், நகர் நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், சுகாதாரக்குழு தலைவர் ராலியாபானு, நகரமைப்பு குழுத் தலைவர் மல்லிகா பங்கேற்றனர்.

Last Updated on Monday, 08 February 2010 05:56
 

'போலியோ'வை விரட்டி விட முடியும்: கலெக்டர் நம்பிக்கை

Print PDF

தினமலர் 08.02.2010

'போலியோ'வை விரட்டி விட முடியும்: கலெக்டர் நம்பிக்கை

தர்மபுரி: ""ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கினால், இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் விரட்டலாம், '' என கலெக்டர் அமுதா தெரிவித்தார். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி முதற்கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. அதில, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 518 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக நேற்று மாவட்டம் முழுவதும் 903 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி பஸ்ஸ்டாண்ட், புறநகர் பஸ்ஸ்டாண்ட் மற்றும் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் அமுதா துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது. ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கினால், இளம்பிள்ளை வாத நோயை சமுகத்தை விட்டு நிச்சயம் விரட்டலாம்.பெற்றோர், ஒவ்வொரு போலியோ சொட்டு முகாமிலும் தங்களுடைய குழந்தைகளுக்கும் கட்டாயம் வழங்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் ஊனம் அடைவதில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் அமுதா பஸ்களில் ஏறி, அதில் பயணம் செய்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு யூனியனுக்கும் இரு விளம்பர வாகனம் என்ற வீதத்தில் மொத்தம் 16 போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் அமுதா துவக்கி வைத்தார்.நகராட்சி தலைவர் ஆனந்தகுமார்ராஜா, மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் சுந்தரவதனம், துணை இயக்குனர் அண்ணாமலை, நகராட்சி கமிஷ்னர் அண்ணாதுரை, ரோட்டரி பழனிச்சாமி, மருத்துவர்கள் அனிதா, தாமரைச்செல்வி, புகழேந்திராஜா, பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி நூலஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் அமுதா துவக்கி வைத்தார். அப்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு அடைந்த பெண்ணுக்கு அவர் ஜனனி சுரக்சனா யோசனா திட்டத்தின் கீழ் 700 ரூபாய் வழங்கினார்.ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் அமுதா உத்தரவிட்டார். சுகாதார துறை துணை இயக்குனர் அய்யனார், உதவி இயக்குனர் அண்ணாமலை, மருத்துவர் மகாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

* தர்மபுரி குமாரசாமி பேட்டை திருவள்ளுவர் அரசு துவக்கப்பள்ளியில் நடந்த போலியோ சொட்டு முகாமில் நகர தி.மு.க., செயலாளர் முருகேசன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். நகர பொறுப்பு குழு உறுப்பினர் குமரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 05:53
 

1.07 லட்சம் குட்டீசுக்கு சொட்டு! கோவை மாநகராட்சி சுறுசுறுப்பு

Print PDF

தினமலர் 08.02.2010

1.07 லட்சம் குட்டீசுக்கு சொட்டு! கோவை மாநகராட்சி சுறுசுறுப்பு

கோவை : கோவை மாநகராட்சி சார்பில் 1.07 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி, கோவை மாநகராட்சியில் இரண்டாம் கட்டமாக நேற்று நடந்தது. நகரில் சீத்தாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் நடந்த முகாமை, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், துணைக்கமிஷனர் சாந்தா, சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து, மேற்கு மண்டல தலைவர் செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மாநகராட்சி நகர் நலத்துறை சார்பில், கோவை நகரில் 1.07 லட்சம் குழந்தைகளுக்கு பல்வேறு மையங்களில் நேற்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காலை 7.00 மணி முதல் சொட்டு மருந்து வழங்கும் பணி துவக்கியது. மாநகராட்சி சார்பில் செயல்படும் 34 நகர் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவு கூடங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. தவிர, நான்கு நடமாடும் மையங்கள் என, மொத்தம் 196 மையங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இப்பணியில் 784 ஊழியர்கள் ஈடுபட்டனர். ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நள்ளிரவு 12.00 மணி வரை சொட்டு மருந்து வழங்க, மாநகராட்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) பெருமாள்சாமி அறிவுறுத்தியிருந்தார்.

Last Updated on Monday, 08 February 2010 05:45
 


Page 367 of 519